2019இல், அமெரிக்காவிலுள்ள இயேசுவின் விசுவாசிகளின் மத்தியில் காணப்பட்ட ஆவிக்குரிய பாரம்பரியத்தை குறித்த ஆய்வின்படி ஆவிக்குரிய முன்னேற்றத்தில் தாய்மார்களும், பாட்டிகளும் பெரும்பங்காற்றுவதாக அறிக்கை கூறுகிறது. ஆவிக்குரிய பின்னணியை சேர்ந்தவர்களில் மூன்றில் இருவர் தங்கள் விசுவாசத்திற்கு தங்கள் தாயை காரணமாகவும், மூன்றில் ஒருவர் தங்கள் தாத்தா பாட்டிகளை (பெரும்பாலும் பாட்டிகள்) காரணமாக கூறுகின்றனர்.

“மீண்டுமீண்டுமாக ஆவிக்குரிய வளர்ச்சியில் தாயின் நிலையான பங்களிப்பை இந்த ஆய்வு காட்டுகிறது” என அந்த ஆய்வின் ஆசிரியர் வியக்கிறார். வேதத்திலும் இதுபோன்ற தாக்கத்தை பார்க்கிறோம்.

தனது சீடனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில் பவுல், தீமோத்தேயுவின் விசுவாசமானது அவனுடைய பாட்டியாகிய லோவிசாலினாலும் தாயாகிய ஐனிக்கேயாவாலும் கொடுக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறார் (2 தீமோத்தேயு 1:5). ஆதித்திருச்சபை தலைவர் ஒருவரின் வாழ்விலிருந்த இரு பெண்களின் தாக்கத்தை குறித்த தனிப்பட்ட குறிப்பு எவ்வளவு இனிமையானது. “‘நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு..பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.”‘ (3:14–15) என்று தீமோத்தேயுவை ஊக்குவிக்க பவுல் கூறுவதிலும் அவர்களின் தாக்கத்தை காணமுடியும்.

வலிமையான ஆவிக்குரிய மரபு ஒரு வரமாகும். ஆயினும் தீமோத்தேயுவின் விசுவாசத்தை வடிவமைத்த நல்ல தாக்கங்கள் நமது வளர்ப்பில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நமது ஆவிக்குரிய வளர்ச்சியை வடிவமைக்கும் உன்னதமான தாக்கங்களை உண்டாக்கும் அநேகர் நமக்குண்டு. அனைத்திற்கும் மேலாக, நம்மை சுற்றிலுமிருப்பர்களுக்கு உண்மையான விசுவாசத்திற்கு ஒரு மாதிரியையும், நிலைத்திருக்கும் மரபையும் விட்டுச்செல்லும் வாய்ப்பும் நமக்குண்டு.