எமிலி டிக்கின்சன் என்னும் கவிஞர் தம்முடைய பாடல் வரியொன்றில், “அனைத்து சத்தியத்தையும் சொல்லுங்கள்; ஆனால், கனிவாய் சொல்லுங்கள்” என்று பாடுகிறார். ஏனெனில், தேவனுடைய சத்தியங்களையும்; மகிமையையும் பலவீனமான நாம் முழுமையாய் விளங்கிக்கொள்ள இயலாது. ஆகையால் தேவனுடைய கிருபையையும் சத்தியத்தையும் கனிவாகவும், தெளிவாகவும், இலைமறைகாயாகவும் அறிவிப்பது நல்லது. சத்தியம் படிப்படியாய் ஒளிரவேண்டும்; இல்லையெனில், ஒவ்வொருவரும் குருடனாய் இருக்க நேரிடும்.
எபேசியர் 4ஆம் அதிகாரத்தில் விசுவாசிகளை, “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (வச.2) செயல்படும்படி வலியுறுத்தும் பவுல், இதே போன்ற ஒரு விவாதத்தை மேற்கொள்கிறார். கிறிஸ்து நமக்குக் காண்பிக்கும் கிருபையான வழிமுறைகளே விசுவாசிகளின் சாந்தகுணத்திற்கும், பிறரைத் தாங்கும் சுபாவத்திற்கும் அஸ்திபாரமென்று விளக்குகிறார். இயேசுவும் மனிதனாக அவதரித்து (வச.9-10), மக்கள் எளிதில் அவரை நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவர் தம்மை எளிமையாய் வெளிப்படுத்தினார்.

“நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்;” (வச.11), தேவன் மென்மையான மற்றும் அன்பின் வழிகளில் மக்கள் வளரவேண்டிய விதத்தில் அவர்களுக்குத் தம்மை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார். நாம் முதிர்ச்சியடையும்போது, பலவீனமான வழிகளில் நம்பிக்கையைத் தேடாமல் (வச.14), கிறிஸ்துவின் அன்பின் மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்போம் (வச.15-16).