ஒவ்வொரு நாள் காலையும், நான் பரமண்டல ஜெபம் சொல்வது வழக்கம். அந்த வார்த்தைகளில் நான் ஊன்றும்வரை என் நாளை துவக்கமாட்டேன். சமீபத்தில், “எங்கள் பிதாவே” எனும் இரு வார்த்தைகளை மட்டும் நான் சொன்னவுடனே, என் செல்பேசி ஒலித்தது. அது காலை 5:43 மணி; சற்று திடுக்கிட்டேன். யாராயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? “அப்பா” என்று செல்பேசி காண்பித்தது. நான் அவர் அழைப்பிற்கு பதிலளிக்குமுன் அதின் சத்தம் அணைந்தது. என் அப்பா தவறுதலாய் என்னை அழைத்துவிட்டார் என்றெண்ணினேன். ஆம்! அது உண்மைதான். ஏதேச்சையான நிகழ்வா? இருக்கலாம். ஆனால், நாம் தேவகிருபை நிறைந்த ஒருலகில் வாழ்கிறோம் என்று நான் நம்புகிறேன். அந்த குறிப்பிட்ட நாளில், நம் தகப்பனின் பிரசன்னத்தை நான் மீண்டும் உறுதிசெய்துகொள்வது அவசியமாயிருந்தது.
அதை ஒரு நிமிடம் யோசியுங்கள். இயேசுகிறிஸ்து, தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் “எங்கள் பிதாவே” (ஆங்கிலத்தில்) (மத்தேயு 6:9) என்றே துவங்குகிறது. ஏதேச்சையானதா? இல்லை. இயேசு, எல்லாவற்றையும் காரணத்தோடே செய்கிறார். நம்முடைய மாம்ச தகப்பனிடத்தில் நம் எல்லோருக்குமான உறவு ஒன்றுபோல் இல்லை. சிலருக்கு நல்ல உறவு இருக்கும்; சிலருக்கு அப்படியிருக்காது. ஆனால் பரமண்டல ஜெபம், “என்” அல்லது “உன்” என்று துவங்காமல் “எங்கள் பிதாவே” என்று துவங்குகிறது. அவர் நம்மைப் பார்க்கிறார், கேட்கிறார், நாம் கேட்பதற்கு முன்னமே நம்முடைய தேவையை அறிந்திருக்கிறார் (வச. 8).
என்ன அழகான வாக்குறுதி! குறிப்பாய் நாம் காணாமற்போனதாய், தனிமையான, கைவிடப்பட்ட, அர்ப்பமாய் எண்ணப்பட்ட தருணங்களில் இந்த வாக்குறுதி நம்மைத் தேற்றுகிறது. நாம் எங்கிருந்தாலும், எல்லா நேரங்களிலும் பரமண்டலங்களில் இருக்கும் நம்முடைய பிதா நம்மருகே இருக்கிறார்.