Archives: மே 2022

புயலை தகர்க்கும் நம்பிக்கை

2021ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் டெக்ஸாஸில், சூழல்காற்றின் அருகே தோன்றிய வானவில்லின் காணொலிகளையும், புகைப்படங்களையும் ஆர்வலர்கள் பதிவுசெய்திருந்தனர். அதில் ஒரு காணொலியில், நீண்ட கோதுமை கதிரின் தண்டுகள் காற்றின் வீரியத்தால் வளைந்திருந்தன, கருவானத்தை துண்டாடிய வானவில், சுழல்காற்றுக்கு முன் கெம்பிரமாய் நின்றது. இன்னொரு காணொலியில், பாதசாரிகள் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு புனல் வடிவ மேகத்தின் அருகே இருந்த அந்த நம்பிக்கையின் சின்னத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

சங்கீதம் 107இல் சங்கீதக்காரன், கடினமான தருணங்களில் தேவனிடத்திற்கு திரும்பும்படிக்கு நமக்கு நம்பிக்கைக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அந்த புயலின் நடுவில் இருப்பவர்களின் “ஞானமெல்லாம் முழுகிப்போகிறது” (வச. 27) என்று விவரிக்கிறார். “அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்” (வச. 28). 

வாழ்க்கையில் புயல் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது நம்பிக்கையோடு செயல்படுவதற்கு தேவனுடைய பிள்ளைகள் தடுமாறுவார்கள் என்பதை தேவன் அறிவார். நம்முடைய பாதை இருளாயிருக்கும்போது, அவருடைய நன்மைகளை நினைவுகூருதல் அவசியம். 

உணர்வு ரீதியான புயலோ, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒன்றோ நம் வாழ்வை கலங்கடிக்கும்போது, தேவன் அதையே அமர்ந்த மெல்லிய சத்தமாய் மாற்றி நம்மை பாதுகாப்பாய் வழிநடத்துவார் (வச. 29-30). நாம் எதிர்பார்த்த நேரத்தில் நமக்கு நன்மை கிட்டவில்லையென்றாலும், அவர் கொடுத்த வாக்குத்தத்தங்களில் அவர் உண்மையுள்ளவர் என்று அவரையே நம்புவோம். எப்பேர்ப்பட்ட புயலையும் தகர்க்க அவர் என்றென்றும் நம்பத்தக்கவரே.

முழு உலகத்திற்கும் சுகம்

இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் பல அலுவலர்களைக் கொண்ட ஒரு மருத்துவ அமைப்பு (ப்ரான்ஜா பார்டிசன் மருத்துவமனை), நாசிச கிளர்ச்சியாளர்களுக்கு மறைவாக, மேற்கு ஸ்லோவேனியாவின் ஒரு வனப்பகுதியில் மறைந்து செயல்பட்டனர். அதைக் கண்டுபிடிக்க நாசிச அமைப்பினர் ஏறெடுத்த பல முயற்சிகள் வீணாய் போனது. அவர்களின் கண்களுக்கு மறைந்து செயல்பட்டதே பெரிய சாதனை. அதை பார்க்கிலும் பெரிதானது, நேச நாடுகளிலிருந்தும், எதிரி நாடுகளிலிருந்தும் காயப்பட்ட அனைத்து இராணுவ வீரர்களையும் அந்த அமைப்பு பராமரித்தது தான். அந்த மருத்துவமனை அனைவரையும் வரவேற்றது. 

முழு உலகமும் ஆவிக்குரிய சுகம் பெற நாம் உதவும்படி வேதம் நம்மை அழைக்கிறது. அதாவது, நாம் பாகுபாடில்லாமல் அனைவர் மீதும் இரக்கம் செலுத்தவேண்டும் என்று அர்த்தமாகிறது. யாராக இருந்தாலும், எப்படியிருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவின் அன்பிற்கும் இரக்கத்திற்கும் பாத்திரவான்கள். பவுல், “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க...” (2 கொரிந்தியர் 5:14) என்று அனைவரையும் அரவணைக்கும் இயேசுவின் அன்பை குறிப்பிடுகிறார். பாவ நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் மன்னிப்பு எனும் சுகம் நம் அனைவருக்கும் அவசியம். அவர் நமக்கு மன்னிப்பைக் கொடுக்க நம்மிடத்தில் வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். 

தேவன் ஆச்சரியவிதமாய், “ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை” (வச.19) நம்மிடத்தில் ஒப்புவித்துள்ளார். நம்மைப் போல் காயப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்ய நம்மை அழைக்கிறார். தேவனோடு ஒப்புரவாகுதலின் மூலம், பாவநோயாளிகள் குணமாகும் மருத்துவ அமைப்பில் நாமும் அங்கத்தினராய் செயல்படுகிறோம். இந்த ஒப்புரவாகுதலும், சுகமும் விரும்புகிற யாவருக்கும் கொடுக்கப்படுகிறது. 

சற்று நிறுத்தி ஜெபியுங்கள்!

வீதியிலிருந்த தீயணைப்பு குழாயிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடைத்தது. அது எனக்கு ஒரு வாய்ப்பாய் தெரிந்தது. எனக்கு முன், பல கார்கள் அதின் தண்ணீரால் தங்களை சுத்தம் செய்துக் கொண்டது. 'காரை சுத்தம் செய்வதற்கு என்ன அருமையான இலவச வாய்ப்பு!' என்றெண்ணினேன். மாதக்கணக்காய் என் காரை கழுவவில்லை. அதினால் அழுக்கு அடர்த்தியாய் படிந்திருந்தது. ஆகையால் நானும் என் காரை அந்த தண்ணீருக்குள் செலுத்தினேன். 

அவ்வளவுதான், 'க்ராக்!' என்று சத்தம் கேட்டது. அன்று காலைல்தான் சூரிய ஒளி என் கருப்புநிற காரின் கண்ணாடி, உட்பகுதியையும் சூடேற்றியிருந்தது. தீயணைப்புக் குழாயிலிருந்து வந்த தண்ணீரோ உறைந்திருந்தது. இந்த குளிர்ந்த நீர் சூடான கண்ணாடியின் மேல் பட்ட மாத்திரத்தில், மேலிருந்து கீழாக விரிசல் ஏற்பட்டது. என் 'இலவச கார் சலவை', அதிக செலவையே உண்டுபண்ணியது. 

அதை செய்வதற்கு முன்பாக சற்று நேரமெடுத்து யோசித்திருந்தால் அல்லது ஜெபித்திருந்தால் நலமாயிருந்திருக்கும். அப்படிப்பட்ட தருணம் உங்களுக்கு நேரிட்டிருக்கிறதா? இஸ்ரவேலர்கள் இதைவிட கடினமான சூழ்நிலைகளில் இதை அனுபவித்துள்ளனர். தேவன் அவர்களுக்குக் கொடுக்கும் தேசத்தின் குடிகளை விரட்டியடிப்பதாக அவர்களுக்கு வாக்குப்பண்ணியிருந்தார் (யோசுவா 3:10). எனவே, அவர்கள் அந்நிய தேவர்களால் ஈர்க்கப்பட அவசியமில்லாதிருந்தது (உபாகமம் 20:16-18). ஆனால் ஒரு புறஜாதி தேசம், இஸ்ரவேலர்களின் வெற்றிகளை பார்த்து பயத்தினால், உலர்ந்து பூசணம் பூத்த அப்பத்தை  உண்ணக் கொடுத்து, தாங்கள் தூர தேசத்தில் வசிப்பவர்களென்று இவர்களை நம்பச் செய்தார்கள் . “அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்”. (யோசுவா 9:14-15). யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணினான். இது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமானது. 

நாம் ஜெபத்தை இறுதியாய் அல்லாமல் முதன்மையாய் வைத்து தீர்மானம் எடுக்கும்போது, தேவனுடைய வழிநடத்துதலையும், ஞானத்தையும், ஆசீர்வாதத்தையும் எதிர்நோக்குகிறோம். சற்று நேரம் நின்று யோசிப்பதற்கு தேவன் இன்று நமக்கு நினைப்பூட்டுவாராக.

இடுக்கமான வாசல் உணவகம்

சுவையான நொருக்குத் தீனிகள், பாலாடைக் கட்டிகள், இறைச்சி என்று அனைத்து வகை சுவையான உணவுகளும் இந்த இடுக்கமான வாசல் உணவகத்தில் உங்களுக்கு காத்திருக்கிறது. தைவானிய நகரமான தைனான் என்ற ஊரிலிருக்கும் இந்த உணவகம், பார்ப்பதற்கு சுவரைக் குடைந்து ஓட்டை ஏற்படுத்தியதுபோலவே இருக்கும். அதின் நுழைவாயில் வெறும் 40 செ.மீ அகலமே கொண்டது. ஒரு சராசரி உடல்வாகு கொண்ட நபர் சிரமப்பட்டு உள்ளே போகலாம். இருப்பினும், அந்த உணவகம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த இடுக்கமான வாசல் லூக்கா 13:22-30இல் குறிப்பிடப்பட்டதற்கு ஒத்திருக்குமா? சிலர் இயேசுவைப் பார்த்து, “இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” (வச.23) என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு, “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” (வச.24) என்று சவால் விடுகிறார். இரட்சிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நீங்கள் இடம்பெற்றிருக்கிறீர்களா? என்று இந்த ஒப்புமையை பயன்படுத்தி யூதர்களின் ஆணவத்தை இயேசு சுட்டிக்காட்டுகிறார். தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்றும், நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவர்கள் என்பதினால் தாங்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்போம் என்று யூதர்களில் பலர் எண்ணியிருந்தனர். ஆனால், “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு” (வச. 25) ஒன்றும் செய்ய இயலாது என்பதினால் அவர்களை முன்பாகவே செவிகொடுக்கும்படி எச்சரிக்கிறார். 

நம்முடைய குடும்ப பின்னணிய பெருமையும், நம்முடைய நற்கிரியைகளும் தேவனோடு நம்மை ஒப்புரவாக்காது. இயேசுவில் நாம் வைக்கும் விசுவாசம் மட்டுமே நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் தப்புவிக்கும் (எபேசியர் 2:8-9; தீத்து 3:5-7). வாசல் இடுக்கமானது, ஆனால் அநேகர் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு விசாலமாய் அமைந்திருக்கிறது. இந்த இடுக்கமான வாசல் வழியாய் அவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த அவர் இன்று நம்மை அழைக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பான எச்சரிப்பு

2010 ஆம் ஆண்டு, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை சுனாமி தாக்கி நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்பட்டிருந்தால் உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் அல்லது வெகுவாக குறைத்திருக்கலாம். சுனாமியை முன்கூட்டியே அறிவிக்கும் கருவிகள் துண்டிக்கப்பட்டு செல்பாட்டில் இல்லாமல் இருந்தன. 

இயேசு, தம்முடைய சீஷர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்கும் மனந்திரும்பாத பாவங்களைக் குறித்து எச்சரிப்பு விடுக்கும்படிக்கு அவர்களுக்கு வலியுறுத்தினார். ஒருவருக்கு விரோதமாய் பாவம் செய்த விசுவாசிக்கு, அவருடைய பாவத்தை தாழ்மையுடனும் தனிப்பட்ட விதத்தில் ஜெபத்தோடும் சுட்டிக்காட்டவேண்டும் என்று இயேசு குறிப்பிடுகிறார் (மத்தேயு 18:15). அவர் மனந்திரும்பினால், அவருடனான பிரச்சனை நீங்கி, உறவு புதுப்பிக்கப்படும் (வச. 16). பாவம் செய்த அந்த நபர் மனந்திரும்பாவிடில், அந்த பிரச்சனையை சபையின் முன்னிலையில் கொண்டுவரவேண்டும் (வச. 17).  தவறிழைத்தவர் தன் தவறைக் குறித்து மனம்வருந்தாத பட்சத்தில், அவர்களை சபையை விட்டு வெளியேற்ற வேண்டும். ஆனாலும் தொடர்ந்து அவர்களுக்காக ஜெபித்து கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கத் தவறக்கூடாது. 

கிறிஸ்துவின் பிரதிநிதிகளாய் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் மனந்திரும்பாத பாவங்களை மென்மையாகவும் நேர்மையாகவும் அன்புடனும் எச்சரித்து, பரலோக தேவனிடத்திலும் மற்ற சக விசுவாசிகளிடத்திலுமான அவர்களின் உறவைப் புதுப்பிக்க பிரயாசப்படுவோம். இயேசு “அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன” என்று வாக்களித்திருக்கிறார் (வச. 20). 

இருதயத்தின் இடங்கள்

இங்கே சில விடுமுறை ஆலோசனைகள் உள்ளது: அடுத்த முறை நீங்கள் அமெரிக்காவின் விஸ்கான்சின் மிடில்டன் வழியாக பயணிக்கும்போது, தேசிய கடுகு அருங்காட்சியகத்தைப் பார்வையிட விரும்பலாம். ஒரு கடுகில் அப்படி என்ன இருக்கிறது என்று யோசிப்பவர்களை, உலகம் முழுவதிலும் உள்ள 6,090 விதமான கடுகுகளைக் கொண்ட இந்த இடம் வியப்புக்குள்ளாக்குகிறது. மெக்லீன், டெக்சாஸில், முள்வேலி அருங்காட்சியகம் முழுவதும் சுற்றித்திரிவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அங்கே வேலிகள் அமைக்கப்பட்டிருக்கும். 

அந்த வேலிகள், நாம் எதுபோன்ற காரியங்களை பார்வையிடவேண்டும் என்பதை நமக்கு வரையறுக்கின்றன. ஒரு எழுத்தாளர், “வாழைப்பழ அருங்காட்சியகத்தில் ஒரு பிற்பகல் நேரத்தை செலவிடுவதை விட மோசமாக நீங்கள் செய்ய முடியும்” என்று கூறுகிறார். 

நாம் வேடிக்கையாக சிரிக்கலாம். நம்முடைய இருதயம் என்னும் அருங்காட்சியகத்தில் நாம் சில விக்கிரகங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்பது உண்மை. தேவன், “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்” (யாத்திராகமம் 20:3) என்றும் “நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்” (வச. 5) என்றும் கட்டளையிடுகிறார். ஆனால் நாம், ஐசுவரியம், இச்சை, வெற்றி, என்று பல இருதயத்தின் நினைவுகளை நம்முடைய விக்கிரகமாய் ஏற்படுத்தி, அவற்றை இரகசியமாய் ஆராதனை செய்துகொண்டிருக்கிறோம். 

இதைப் படித்துவிட்டு, சொல்லவரும் காரியத்தை தவறவிடுவது இயல்பு. ஆம், நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொண்ட பாவ அருங்காட்சியகத்தை தேவன் நம்முடைய பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார். அவரை நேசிப்பவர்களுக்கு “ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” (வச. 6) என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். நம்முடைய அருங்காட்சியகங்கள் எவ்வளவு சீர்கேடானது என்பது அவருக்கு தெரியும். அவர் மீதான அன்பில் மாத்திரமே நம்முடைய மெய்யான திருப்தி அமைந்திருக்கிறது என்பதும் அவருக்கு தெரியும்.

காலங்கள்

நான் சமீபத்தில் ஒரு பயனுள்ள வார்த்தையைக் கண்டறிந்தேன்: “குளிர்காலம்.” இயற்கை உலகின் பெரும்பகுதியை இந்த குளிர்காலம் அமைதிப்படுத்துவது போல, வாழ்க்கையின் “குளிர்” பருவங்களில் ஓய்வெடுக்கவும், குணமடையவும் வேண்டியதன் அவசியத்தை விவரிக்க, எழுத்தாளர் கேத்தரின் மே இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தந்தையை நான் இழந்த பிறகு இந்த ஒப்புமை எனக்கு உதவியாயிருந்தது. இது எனது ஆற்றலை பல மாதங்கள் புதுப்பித்தது. இந்த குளிரானது வலுக்கட்டாயமாய் என் வேகத்தைக் குறைத்ததால் கோபமடைந்த நான், எனது குளிர்காலத்தை எதிர்த்துப் போராடினேன். கோடைக்கால வாழ்க்கை திரும்ப வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருந்தது.

பிரசங்கி, “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” என்று சொல்லுகிறார் (3:1-4). நடவும் நட்டதை பிடுங்கவும், அழவும் நகைக்கவும், புலம்பவும் நடனம் பண்ணவும் ஒவ்வொரு காலமுண்டு. இந்த வேதவாக்கியத்தை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் குளிர்காலத்தில் தான் அதின் அர்த்தம் எனக்கு விளங்கியது. அவர்கள் மீது நமக்குக் கட்டுப்பாடு இல்லை என்றாலும், ஒவ்வொரு பருவமும் வரையறுக்கப்பட்டதாக இருக்கும், அதன் வேலை முடிந்ததும் கடந்து போகும். அது என்னவென்று நம்மால் எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், தேவன் அவைகள் மூலமாக நம்மில் கிரியை செய்கிறார் (வச. 11). என் துக்கநாட்கள் இன்னும் முடியவில்லை. அது முடியும்போது நான் நடனம்பண்ணும் காலம் வரும். தாவரங்களும் விலங்குகளும் குளிர்காலத்தை எதிர்த்துப் போராடாதது போல, நானும் அதை எதிர்த்துபோராட வேண்டியதில்லை. அது அதனுடைய வேலையை செய்வதற்கு அதை முழுமையாய் அனுமதிக்கவேண்டும். 

ஒரு சிநேகிதன், “கர்த்தாவே, உம்முடைய நற்கிரியைகளை இந்த காலத்தில் ஷெரிடனுக்குள் செய்வீர்களா?” என்று சொல்லி எனக்காக ஜெபித்தான். அது என்னுடைய ஜெபத்தைக் காட்டிலும் சிறந்த ஜெபம். தேவனுடைய கரத்தில் காலங்கள் ஒரு நோக்கத்தோடு அனுமதிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றிலும் அவருடைய புதுப்பிக்கும் கிரியைகளை காண நம்மை அர்ப்பணிப்போம்.