கேத்ரீனும், நானும் சிறந்த பள்ளிபருவ நண்பர்கள். நாங்கள் தொலைபேசியில் பேசுவதோடு, இரவில் யார் வீட்டில் தங்குவதென்று வகுப்பில் துண்டுக் குறிப்புகளை அனுப்பிக் கொள்வோம். சிலநேரம் வாரயிறுதி நாட்களை ஒன்றாகக் கழித்து, பள்ளி வேலைகளை இணைந்து செய்வோம்.  

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், கேத்ரீனை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அன்று காலை என் சபை போதகர் நித்திய வாழ்வைக் குறித்துப் பிரசங்கித்தார். ஆனால் நான் வேதத்தை நம்புவதைப் போல, அவள் வேதத்தை நம்பவில்லை. நான் பாரப்பட்டு, அவளை அழைத்து இயேசுவோடு எப்படி உறவுகொள்வது என்பதைக் குறித்து அவளுக்கு விளக்க விரும்பினேன். ஒருவேளை நான் சொல்வதை அவள் நிராகரித்து, என்னுடனான சிநேகிதத்தை விட்டு விலகிவிடுவாளோ என்றும் தயங்கினேன்.

இந்த பயமே நம்மில் அநேகரை அமைதியாய் இருக்கச் செய்கிறது. பவுல் அப்போஸ்தலனும் கூட, “நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு” (எபேசியர் 6:20) “எனக்காய் வேண்டிக்கொள்ளுங்கள்” என்று ஜனங்களிடம் கேட்க வேண்டியிருந்தது. நற்செய்தியைப் பகிர்வதில் எந்த ஆபத்தும் இல்லை. எனினும், பவுல் தன்னை தேவனுடைய சார்பில் நின்று பேசக்கூடிய “ஸ்தானாதிபதி” (வச.19) என்கிறார். நாமும் அப்படித்தான். ஜனங்கள் நம்முடைய செய்தியை நிராகரித்தால், அந்த செய்தியை நம்மிடம் கொடுத்தனுப்பியவரை நிராகரிக்கின்றனர் என்று அர்த்தம். நம்முடைய நிராகரிக்கப்படுதலை நம்மோடு சேர்ந்து தேவனும் அனுபவிக்கிறார்.

ஆகவே, எது நம்மை பேசத் தூண்டுகிறது? தேவனைப் போலவே நாமும் மக்கள் மீது அக்கறையோடிருக்கிறோம் (2 பேதுரு 3:9). கேத்ரீனை துணிந்து கூப்பிடுவதற்கு இதுவே எனக்கு உந்துதலாயிருந்தது. ஆச்சரியப்படும்படி அவள் எனக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை, நான் சொன்னதைக் கவனமாக கேட்டாள். என்னிடம் சில கேள்விகளும் கேட்டாள். அவள் தன்னுடைய பாவங்களை மன்னிக்கும்படி இயேசுவிடம் வேண்டி, அவருக்காய் வாழத் தீர்மானித்தாள். என்னுடைய துணிச்சலான முயற்சி பலனளித்தது.