Archives: பிப்ரவரி 2022

மகிழ்ச்சியை தெரிந்துகொள்ளுதல்

எழுத்தாளர் மார்லின் மக்என்டயர், தன் தோழியிடமிருந்து "மகிழ்ச்சியாயிருப்பதே பொறாமைக்கு எதிரானது" என்பதை தான் கற்றுக்கொண்ட விதத்தை பகிர்கிறார். இந்த தோழி மாற்றுத் திறனாளியாக, நெடுநாளாய் பல வலிகளோடு இருந்தவர், அவருடைய திறமைகளை அவர் விரும்பிய வகையில் வளர்த்திக்கொள்ள முடியாமல் அவர் உடல்நிலை அவர் திறன்களை மட்டுப்படுத்தியது. இருந்தபோதிலும், அவர் எப்படியோ தனித்துவமாக சந்தோஷத்தை அனுபவித்து மற்றவர்களோடும் மகிழ்ந்தார். அவர் மரிக்கும் முன்னர், தான் எதிர்கொண்ட ஒவ்வொன்றையும் பாராட்டி மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

"பொறாமைக்கு எதிர்மறையானது மகிழ்ச்சியாய் இருப்பது" இந்த புரிந்துகொள்ளுதல், எனக்குள் நீட்டித்திருக்கிறது. என் வாழ்விலும் இருக்கும் சில நண்பர்களை எனக்கு நினைவூட்டுகிறது. அவர்கள் தங்களை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காமல், மற்றவர்களுக்காக ஆழமாகவும், உண்மையாகவும் மகிழ்ச்சி கொள்பவர்களாய் ​வாழ்கின்றனர்.

பொறாமை என்பது சுலபமாய் சிக்கிக் கொள்ளக்கூடிய வலை. அது நம்முடைய ஆழமான பாதிப்புகளையும், காயங்களையும், மற்றும் பயங்களையும் பயன்படுத்தி நாம் இப்படி இருந்தால் நமக்கு கஷ்டங்கள் இருக்காது, நாம் கவலைப்பட வேண்டியிருக்காது என்று நம்மோடு கிசுகிசுத்து கொண்டே இருக்கும்.

பேதுரு, புதிய விசுவாசிகளுக்கு 1பேதுரு 2இல் நினைப்பூட்டியது போல, பொறாமை நமக்கு சொல்லும் பொய்களிலிருந்து விடுபட இருக்கும் ஒரே வழி, சத்தியத்தில் ஆழமாக வேரூன்றுவது தான். எப்படியெனில், கர்த்தர் தயையுள்ளவர் என்பதை ஆழமாக ருசிப்பது; அதாவது ஆழமாக அனுபவிப்பது (வ.1-3). நாம் "சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு" கூரமுடியும் (1:22) எப்பொழுதெனில் ,"என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான" (1:23) தேவவசனமே நமது சந்தோஷத்தின் மெய்யான ஆதாரம் என்று நாம் அறிந்துகொள்ளும்.

நாம் உண்மையாகவே தெரிந்துகொள்ளப்பட்ட சநததியினராய், அவருக்குச் சொந்தமான ஜனமாயும், அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்க பட்டவர்களாயும் (2:9) இருக்கிறோம் என்பதை நாம் நினைவுகூரும்போது, மற்றவர்களோடு ஓப்பிடுவதை விட்டுவிடுவோம்.

நற்செய்தியின் மகிழ்ச்சி

1964 ஆம் ஆண்டு ஒரு மாலையில், மகா அலாஸ்க்காவின் நிலநடுக்கம், நான்கு நிமிடங்களுக்கு மேலாக நீடித்து, 9.2 அளவு பதிவாகி, அனைத்தையும் அசைத்தும், உதிர்த்தும் போட்டது. நங்கூரம் பாய்ச்சுமிடத்தில் நகரத்தின் பகுதிகள் உள்வாங்கி, பெரும் பள்ளங்களும், இடிபாடுகளும் மட்டும் இருந்தன. அந்த பயங்கரமான இரவின் இருளினூடே, செய்தியாளர் ஜெனி சான்ஸ் தனது மைக்கை பிடித்திக்கொண்டு, தங்கள் வானொலிகளின் அருகிலே தவிப்போடு இருந்த மக்களுக்கு செய்திகளை வழங்கினார்: புதர்களில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு கணவர் தன் மனைவி உயிரோடிருப்பதை கேட்டறிந்தார், சாரணர் படையின் முகாமிற்கு சென்ற தங்கள் மகன்கள் நலமாயிருப்பதை அந்த கலக்கமடைந்த குடும்பத்தினர் கேட்டறிந்தனர், காணாமல் போன தங்கள் பிள்ளை மீண்டும் கிடைத்த செய்தியை அந்த தம்பதியினர் கேட்டனர், வானொலி வரிக்கு வரி நல்ல செய்திகளை இந்த அழிவின் மத்தியிலும் அறிவித்தது.

தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளை கேட்டபோது இஸ்ரவேல் ஜனங்கள் இப்படியாக தான் உணர்ந்திருப்பார்கள், அவர், "சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்" (61:1) என்றார். தரிசாய்ப்போன தங்கள் தலைகீழான வாழ்க்கையையும், இருளடைந்த எதிர்காலத்தையும் அவர்கள் வெறித்துக் கொண்டிருந்தபோது, ஏசாயாவின் தெளிவான குரல் அனைத்தும் இழந்ததுபோல தோன்றிய தருவாயில் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டுவந்தது. தேவன், "இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும்… நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து"(வ.1,4) இவைகளை செய்ய நோக்கமாயிருந்தார். பயங்கரத்தின் மத்தியிலே, ஜனங்கள் தேவனுடைய உறுதியளிக்கும் வாக்குத்தத்தை கேட்டனர், அது அவருடைய நற்செய்தியே.

இன்று நமக்கு, இயேசுவிலே, தேவனுடைய நற்செய்தியை கேட்கிறோம். இதுதான் சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு பொருள். நம் பயங்களினுடே, வலிகளினுடே, மற்றும் தோல்விகளின் மத்தியில் அவர் நற்செய்தியை வழங்குகிறார்.அதினால், நம் துன்பங்கள் விலகி சந்தோஷத்திற்கு வழிவிடும். 

குடும்பத்தின் அங்கத்தினர்

ஒரு பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி நாடகம், இதில் ஒரு கற்பனை குடும்பம் 1900 களின் முற்பகுதியில் இருந்த சமூக கட்டமைப்பின் வழியே பயணிப்பதை பற்றி இருந்தது. அதில் முக்கிய கதாபாத்திரம், ஆரம்பத்தில் அந்த குடும்பத்தின் பணியாளராய் வேலை செய்து, பின்னர் எல்லோருக்கும் அதிர்ச்சியூட்டும் வண்ணம் அதே குடும்பத்தின் இளையவளாக இருந்த மகளை திருமணம் செய்தார். குறிப்பிட்ட காலம் துரத்திவிடப்பட்ட அந்த தம்பதியினர், அவர்களுடைய குடும்பத்திற்கும், வீட்டுக்கும் திரும்புகின்றனர், இப்போது அந்த புது மாப்பிளை அந்த குடும்பத்தின் அங்கத்தினராக மாறுகிறார், ஒரு வேலைக்காரனாக அவருக்கு மறுக்கப்பட்ட உரிமைகளும், சலுகைகளும் இப்போது குடும்பத்தின் அங்கத்தினராக அவருக்கு கிடைக்கிறது.

நாமும் கூட,"அந்நியரும் பரதேசிகளுமாய்" (எபேசியர் 2:19) முன்னர் இருந்தோம். மேலும் தேவனுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளுக்கு புறம்பாயிருந்தோம். ஆனால் இயேசுவால், அணைத்து விசுவாசிகளும், அவர்கள் யாராய் இருந்திருந்தாலும், தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டு "தேவனுடைய வீட்டார்" (வ.19) என அழைக்கப்படுகிறார்கள்.

தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினராக இருப்பது வியத்தகு உரிமைகளையும் சலுகைகளையும் வழங்குகிறது. நமக்கு "தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது."(3:12) அதினால் தேவனோடு அளவில்லாத, தடையில்லாத தொடர்பை நாம் அனுபவிக்கிறோம். நாம், இன்னும் பெரிய குடும்பத்தின் அங்கத்தினராய் மாறுகிறோம், நம்மை தாங்கவும், உற்சாகப்படுத்தவும் இருக்கும் விசுவாச சமூகமே அது (2:19-22). தேவகுடும்பத்தின் உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் உதவும் சலுகை உடையவர்களாய், தேவனுடைய அளவிட முடியா அன்பை மகத்தாய் பற்றிகொள்ளமுடியும் (3:18).

பயம் அல்லது சந்தேகம் நம்மை சுலபமாக அந்நியரை போல உணரவைக்கும், மேலும் தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கமாய் மாறுவதால் உண்டாகும் பலன்களை அனுபவிப்பதில் இருந்து முற்றிலுமாய் நம்மை விலக்கி போடும். ஆனால் தேவனுடைய இலவசமும், உதாரத்துவமுமான அன்பின் வெகுமதிகளின் உண்மை தன்மைக்கு செவிகொடுத்து, மீண்டும் ஒருமுறை அதை பற்றிக் கொள்ளலாம் (2:8-10). மேலும் அவருடையவர்களாய் இருப்பதினால் உண்டாகும் பிரமிப்பில் நாம் களிகூரலாம்.

கதவை தவிர்க்கவும்

அந்த எலியின் மூக்கை ஏதோ ஒன்று சுண்டி இழுத்தது. ஏதோ ஒன்று மிக ருசிகரமான உணவு அருகிலேயே இருந்தது. திடமாக அந்த மணம், பறவைகள் உண்ணும் ருசிகரமான விதைகள் நிறைந்த தீவனத்தொட்டிக்கு நேரே இட்டுச்சென்றது. அந்த எலி சங்கிலியின் வழியே கீழே இறங்கி தீவனத்தை நோக்கி வந்தது, கதவின் இடுக்கின் உள்ளே நுழைந்து இரவெல்லாம்  தின்று கொண்டே இருந்தது. காலையில்தான் தான் சிக்கியிருந்த ஆபத்தை உணர்ந்தது. இப்பொழுது பறவைகள் அந்த தீவனத்தொட்டியின் வழியே அதை கொத்த துவங்கின. ஆனால் விதைகளை தெவிட்ட தெவிட்ட அதிகம் தின்ற காரணத்தினால், அது பெருத்துப் போய் தப்பிக்க இயலாமல் மாட்டிக்கொண்டது.

கதவுகள் நம்மை மிகவும் அற்புதமான இடங்களுக்கு நேரே நடத்தும், அல்லது ஆபத்தான இடங்களுக்கும் நடத்தும். நீதிமொழிகள் 5ல், பாலியல் சோதனைகளை தவிர்க்கும்படியான சாலமோனின் அறிவுரைகளிலும், கதவு பிரதான அம்சமாய் இருக்கிறது. பாலியல் பாவம் கவர்ந்து இழுக்கக் கூடிய ஒன்றாய் இருப்பினும், அதைப் பின்தொடர்ந்தால், ஆபத்து காத்திருக்கிறது (5:3-6) என்று அவர் கூறுகிறார். அதைவிட்டு தூரமாய் தள்ளி இருப்பதே சிறந்தது; ஏனெனில், அந்த கதவின் வழியாக நீங்கள் நடந்தால், நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள், உங்களுடைய மரியாதையை இழந்து, உங்கள் செல்வமெல்லாம் அன்னியர்களால் பிடுங்கிக் கொள்ளப்படும் (வ.7-11) மாறாக, நம்முடைய வாழ்க்கை துணைகளோடு இன்பமாய் இருப்பதையே சாலமோன் அறிவுறுத்துகிறார் (வ.15-20). அவருடைய அறிவுரை இதற்காக மட்டுமல்லாமல் மற்ற பாவங்களுக்கும் பொருந்தும். பெருந்திண்டியின் சோதனையோ, அல்லது அதிகமாக செலவழிக்கும் சோதனையோ, அல்லது வேறு எதுவாயிருந்தாலும், நாம் சிக்கிக் கொள்ளக் கூடிய கதவை தவிர்ப்பதற்கு தேவன் நமக்கு உதவுவார்.

அந்த வீட்டின் எஜமான், தனது பறவைகளின் தீவனத் தொட்டியில் சிக்கிக்கொண்ட எலியை கண்டு, அதை தனது தோட்டத்தில் விடுவிக்கும் போது, அந்த எலி மிகுந்த சந்தோஷமாய் இருந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, தேவனுடைய கரமும் நாம் சிக்கிக்கொள்ளும் போது நம்மை விடுவிக்க ஆயத்தமாக உள்ளது. ஆனால் எல்லாவற்றிற்கும் முன்னராகவே, நாம் சிக்கிக்கொள்ளும் கதவை நாம் தவிர்க்க தேவனின் பெலத்தை கேட்டு பெற்றுக்கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).

 

தேர்ந்தெடுப்பு அவசியம்

பாஸ்டர் டாமியனின் தினசரி அலுவல் அட்டவணையில், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளைத் தெரிந்தெடுத்து மரணத்தை நெருங்கும் இரண்டு நபர்களை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்த்து. ஓர் மருத்துவமனையில் தன் குடும்பத்தாரால் விரும்பப்படும் ஓர் பெண் இருந்தாள். அவளது தன்னலமற்ற பொதுச்சேவை பலரின் அபிமானத்தை பெற்றதால் மற்ற விசுவாசிகள் அவளது அறையை நிரப்பி, ஆராதனை, பாடல், ஜெபம் என்று செய்தனர். மற்றொரு மருத்துவமனையில், பாஸ்டர் டாமியனின் தேவாலயத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரின் உறவினரும் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரது கடினமான இதயம் கடினமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. மேலும் அவரது மோசமான முடிவுகள் மற்றும் தவறான செயல்களின் பின்னணியில் அவரது குடும்பம் வாழ்ந்துவந்தது. இந்த இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பிரதிபலித்தது. 

வாழ்க்கையில் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறியவர்கள் பெரும்பாலும் சங்கடமான, விரும்பத்தகாத, தனிமையான இடங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12, “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று கூறுகிறது. இளைஞர்கள் அல்லது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நலமுடையவர்கள், செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என யாராக இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கைப் பாதையை சரிசெய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அது தேவனை கனப்படுத்துமா? அது மற்றவர்களுக்கு உதவக்கூடியதா அல்லது பாதிக்கக்கூடியதா? இயேசுவை விசுவாசிப்பவருக்கு இது சிறந்த பாதையா?

தேர்ந்தெடுப்புகள் மிகவும் முக்கியம். பரலோகத்தின் தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று வாக்குப்பண்ணுகிறார்.