நான்! சத்தம் வந்த திசையில் திரும்பிப்பார்த்தேன். என் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் ஏதோ மோதி விழுந்த அழுக்குத்தடம் தெரிந்தது. வெளியே எட்டிப்பார்த்தேன். பறவையொன்று கீழேவிழுந்து துடித்துக்கொண்டிருந்தது. என் மனது வலித்தது. சிறகொடிந்த அந்த பறவைக்கு உதவிசெய்ய ஏங்கினேன்.

மத்தேயு 10இல், வரப்போகிற அழிவைக் குறித்து எச்சரிக்கப்பட்ட சீஷர்களை ஆறுதல்படுத்தும் நோக்கத்துடன் இயேசு, அடைக்கலான் குருவி மீதும் அக்கறைக்காட்டும் பிதாவைக் குறித்து தெரிவிக்கிறார். இயேசு, “தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (வச. 1). சீஷர்களுக்கு அருளப்பட்ட இந்த வல்லமை அதிகமாய் தெரிந்தாலும், அதினிமித்தம் அவர்கள் அதிகாரத்திலுள்ள பலரால் பகைக்கப்படுவார்கள், தன் சொந்த குடும்பத்தினரால் வெறுக்கப்படுவார்கள்; தீமையின் விளிம்பில் நிறுத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்படுகின்றனர் (வச. 16-28).

பின்பு 10:29-31இல் இயேசு, எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்களை பயப்படவேண்டாம் என்றும் அவர்கள் தேவனுடைய பாதுகாப்பிலிருந்து என்றுமே விலகவில்லை என்றும் அறிவுறுத்துகிறார். “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா?” என்று கேட்கிறார். “ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது… ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷத்தவர்களாயிருக்கிறீர்கள்” என்று உறுதிகொடுக்கிறார்.

ஜன்னலுக்கு கீழே விழுந்த அந்த பறவையை அடிக்கடி கண்காணித்தேன். அது உயிரோடுதான் இருந்தது. ஆனால் கொஞ்சமும் அசையவில்லை. மாலையில் அது பறந்துபோய்விட்டது. அது உயிர்பிழைக்கவேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டேன். ஒரு பறவைக்காக நானே இந்த அளவிற்கு அக்கறை எடுத்துக்கொள்வேன் என்றால், தேவன் இதைவிட அதிகமாய் அக்கறை செலுத்துவது அதிக நிச்சயம். அவர் நம்மீது எந்த அளவிற்கு அக்கறைக் காட்டுகிறார் என்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள்!