சனிக்கிழமை காலை 6:33 மணிக்கு அந்த துதி பாடலின் சத்தம் மேல் மாடியில் இருந்து தவழ்ந்து வந்தது. வேறு யாரும் அந்த வேளையில் முழித்து இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய இளைய மகளுடைய கீச்சென்ற குரல் என்னுடைய எண்ணம் தவறு என்று காட்டியது. தான் நன்றாக முழிக்கும் முன்னரே பாட்டு பாட ஆரம்பித்து விட்டாள். 

என்னுடைய இளைய மகள் ஒரு பாடகி. அவளாலே பாடாமல் இருக்கவே முடியாது. முழிக்கும்போது பாடுவாள். பள்ளி செல்லும்போது பாடுவாள். படுக்கப் போகும்போது பாடுவாள். தன்னுடைய இதயத்தில் ஒரு பாடலோடு பிறந்தவள் அவள். அவளுடைய பாடல்கள் அநேகமாக எல்லாமே இயேசுவைப் பற்றியதாய் இருக்கும். தேவனை அவள் எந்நேரமும், எங்குமே துடித்துக் கொண்டிருப்பாள்.

என் மகளுடைய எளிமை, பக்தி, ஆர்வமான குரல் எனக்கு மிகவும் பிரியம். அவள் தானாக  பாடும் மகிழ்ச்சி பாடல்கள், வேதத்தில் தேவனைத் துதிக்க நம்மை ஏவும் வேதவாக்யங்களை பிரதிபலிக்கும். “கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்” என்று சங்கீதம் 95ல் வாசிக்கிறோம். இன்னும் பார்க்கும்போது இந்த துதி அவர்  யார், நாம் யாருடையவர்கள்  என்ற உணர்விலிருந்து உதிப்பதாக அறிகிறோம்: “கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார் (வச. 3), அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே (வச. 7).

என் மகளுக்கு இந்த உண்மைகளே  காலையில்  தோன்றும் முதல்  சிந்தனைகள்.  தேவகிருபையால், இந்த குட்டி ஆராதனைவீராங்கனை,  தேவனை  துதிப்பதில் காணும் மகிழ்ச்சியை நமக்கு ஆழமாக  நினைப்பூட்டுகிறாள்.