Archives: ஆகஸ்ட் 2020

வேலையாள் செவிகொடுக்கின்றான்

கம்பியில்லா ரேடியோ தொடர்பு சாதனம் இயங்கும் நிலையில்  இருந்திருந்தால், அவர்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்திருப்பார்கள். மற்றொரு கப்பலில் இருந்த ரேடியோ இயக்குபவர் சிரில் இவான்ஸ் என்பவர், டைட்டானிக் கப்பலின் ரேடியோ இயக்குபவர் ஜாக் பிலிப்ஸ் என்பவருக்கு, அவர்களின் கப்பல் ஒரு பனிப்பாறையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, ஒரு செய்தியை அனுப்பினார். ஆனால் அந்த ரேடியோ இயக்குபவர், பிரயாணிகளின் செய்திகளை அனுப்புவதில் தீவிரமாக இருந்ததால், கோபத்தில் அமைதியாக இருக்குமாறு செய்தி அனுப்பினார். இதனால் வருத்தமடைந்த அந்த ரேடியோ இயக்குபவர் தன்னுடைய ரேடியோ சாதனத்தை மூடி விட்டு தூங்கச் சென்று விட்டார். 10 நிமிடங்கள் கழித்து டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியது. அவர்களின் துயரக் குரல் பதிலளிக்கப் படாமல்போய் விட்டது, அதனை யாருமே கவனிக்கவில்லை, கேட்கவில்லை.

 இஸ்ரவேலின் ஆசாரியர்கள் பரிதானத்துக்கு அடிமைப் பட்டு, தங்களின் ஆவிக்குரிய வாழ்வை இழந்ததையும், தேசம் ஆபத்தை நோக்கி இழுக்கப்படுவதையும் குறித்து 1 சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கின்றோம். “அந்நாட்களில் கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை” (1 சாமு. 3:1) என்பதாகக் காண்கின்றோம். ஆனாலும் தேவன் அவருடைய ஜனங்களைக் கைவிடவில்லை. அவர், கர்த்தருடைய ஆசாரியனின் வீட்டில் வளர்க்கப்பட்ட ,சாமுவேல் என்ற ஒரு சிறுவனிடம் பேசுகின்றார். சாமுவேல் என்ற பெயருக்கு “தேவன் செவிகொடுக்கின்றார்” என்று அர்த்தம். அவனுடைய தாயாரின் ஜெபத்திற்கு தேவன் பதிலளித்தார் என்பதின் நினைவாக அப்பெயரிடப் பட்டான். தேவனுக்குச் செவிகொடுக்க சாமுவேல் கற்றுக் கொள்ள வேண்டும்.

“சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வ.10). இங்கு வேலையாள் கேட்கிறான். வேதாகமத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் காரியங்களுக்கு செவிகொடுக்கவும் கீழ்ப்படியவும் நாம் தெரிந்து கொள்வோம். நம்முடைய வாழ்வை அவருக்கு ஒப்புக் கொடுப்போம். தங்களின் “ரேடியோக்களை” இயங்கும் நிலையில் வைத்திருக்கும்- தாழ்மையுள்ள அடிமையின் ரூபத்தை நாம் தரித்துக் கொள்வோம்.

தற்பரிசோதனை

சமீபத்தில், இரண்டாம் உலகப் போரின் போது, என்னுடைய   தந்தை என்னுடைய தாயாருக்கு அனுப்பி வைத்த கடிதங்களைப்  படித்தேன். அவர் வட ஆப்ரிக்காவில் இருந்தார், என் தாயார் அமெரிக்காவில் இருந்தார். என்னுடைய தந்தை, அமெரிக்க இராணுவத்தில் இளம் நிலை அதிகாரியாக இருந்தார், இராணுவ வீரர்களின் கடிதங்களை தணிக்கை செய்யும் பொறுப்பைப்    பெற்றிருந்தார். மிக முக்கியமான செய்திகள் எதிரிகளைச் சேராதபடி காப்பதற்காக இதனைச் செய்தார். அக்கடிதங்களைப் பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாகவே இருந்தது.  தன் மனைவிக்கு எழுதிய அக்கடிதத்தின் வெளிப்பக்கத்தில், “இரண்டாம் நிலை அதிகாரி ஜாண் பிரானன் (என்னுடைய தந்தையின் பெயர்) அவர்களால் தணிக்கை செய்யப்பட்டது” என்று முத்திரையிடப்பட்டிருந்தது. தன்னுடைய  சொந்த கடிதத்திலேயே சில வரிகளை அடித்திருந்தார்!

சுய தணிக்கை என்பது, நம் அனைவருக்குமே நன்மையானது. வேதாகமத்தில் அநேக இடங்களில் அதை எழுதியவர்கள், நம்மிடத்தில் சரியில்லாதவை எவை, தேவனுக்கு மகிமையைத் தராதவை எவை என நம்மை நாமே சோதிப்பதின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றனர். சங்கீதக்காரன், “தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும் ……..வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்” (சங்.139:23-24) என்கின்றான். எரேமியா அதனை இவ்வாறு கூறுகின்றார். “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து, ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவோம்” (புல.3:40) என்கின்றார். திரு விருந்தில் பங்கேற்கும் முன்பு, “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்” (1 கொரி.11:28) என்று பவுல் நம்முடைய இருதயத்தைக் குறித்துக் கூறுகின்றார்.

தேவனுக்குப் பிரியமில்லாத எந்தச் செயலையும், எந்த மனப்பான்மையையும் விட்டு திரும்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் உதவிசெய்வார். எனவே நாம் இந்த உலகத்தினுள் நுழைவதற்கு முன்பாக, நாம் நின்று ஆவியானவரின் உதவியோடு சுய சோதனை செய்வோம், அதன் மூலம் நாம் அவரோடு ஐக்கியமாகும்படி, “தேவனிடம் திரும்புவோம்”.

மிகச் சிறந்த அலை

“அலையை” ஏற்படுத்த மக்கள் விரும்புவர்.  உலகெங்கும் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், இசைக் கச்சேரிகளிலும் ஒரு சில மக்கள் எழுந்து நின்று, தங்கள் கைகளை உயர்த்தி அசைக்கின்றனர், இதுவே ஆரம்பம், சில நொடிகளில், அவர்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும் எழுந்து அதனையே செய்கின்றனர். இலக்கு என்னவெனில், ஓர் அசைவு தொடர்ச்சியாகப் பரவி, முழு அரங்கையும் அசையச் செய்வதேயாகும். அது அரங்கத்தின் கடைசி முனையை எட்டியதும், அதனைத் தொடங்கியவர் சிரித்து ஆர்ப்பரிக்கின்றார், தொடர்ந்து அசைவுகளை போய்க் கொண்டிருக்கச் செய்கின்றார்.

முதல் முதலாக பதிவு செய்யப்பட்ட அலை நிகழ்வு, 1981 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்வில் ஏற்படுத்தப் பட்டது. இத்தகைய அலையில் பங்கு பெற நான் விரும்புகின்றேன், ஏனெனில் அது வேடிக்கையாக இருக்கும். இந்த அலையைச் செய்யும் போது, நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியும், ஒன்றிணைவதும் சுவிசேஷத்தைப் பிரதிபலிக்கின்றது- இயேசுவில் நாம் பெறுகின்ற இரட்சிப்பு என்கின்ற நற்செய்தி, எங்கும் உள்ள விசுவாசிகள் அனைவரையும் அவரைப் போற்றுவதிலும் நம்பிக்கையிலும் ஒன்றிணைக்கின்றது. இந்த “முழுமையான அலை” இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் துவங்கியது. கொலோசே சபை அங்கத்தினர்களுக்கு பவுல் எழுதும் போது, இதனைக் குறித்து, “அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன் தருகிறது போல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவக் கிருபையைச் சத்தியத்தின்படி அறிந்து கொண்ட நாள் முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாயிருக்கிறது” (கொலோ.1:6) என்கின்றார். இந்த நற்செய்தி தருகின்ற பலன் என்னவெனின், பரலோகத்தில் உங்களுக்காக (நமக்காக) வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம் பெற்றுள்ள, கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசமும் அன்பும் ஆகும் (வ.3-4).

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம், சரித்திரத்திலேயே மிகப் பெரிய அலையில் பங்கெடுக்கின்றோம். அதனைத் தொடர்ந்து செய்வோம்! நாம் அனைவரும் அதனை நிறைவேற்றி முடிக்கும் போது, அதைத் துவக்கியவரின் முகத்தில் ஏற்படும் சிரிப்பைக் காண்போம்.

தேவன் நம்மை விடுவிப்பவர்

சைக்கிள், ஓட்டம், நீச்சல் ஆகிய மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கிய  (டிரையத்லான்) போட்டியில் கலந்து கொள்பவர்களில், பயந்து விடும் நீச்சல் வீரர்களை காப்பாற்றும்படி, மீட்பவர் ஒருவர் கடற்பரப்பில் தன்னுடைய படகில் தயாராக இருந்தாள். “படகின் மையப்பகுதியை பற்றிப் பிடிக்காதீர்கள்!” என்று நீச்சல் வீரர்களிடம் கத்தினாள், ஏனெனில் அத்தகைய ஒரு காரியம் அவளுடைய படகையும் கவிழ்த்திவிடும் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால், அந்த சோர்வடைந்த வீரர்களை முன்பக்கதிற்கு, அல்லது துடுப்பின் அருகில் வருமாறு வழிகாட்டினாள். அங்கே அவர்கள் ஒரு வளையத்தைப் பற்றிக் கொள்ள முடியும், அவர்களை மீட்பவரும் உதவுவதற்கு வசதியாக இருக்கும்.

எப்பொழுதெல்லாம் வாழ்வு அல்லது மக்கள் நம்மை கீழே இழுத்துவிடும் அச்சுறுத்தல் கொடுக்கும் போது, இயேசுவின் விசுவாசிகளாகிய நமக்கு மீட்பர் ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுவோம். “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்………………… அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணுவேன்” (எசே.34:11-12) என்கின்றார்.

சிறைப் பட்டுப் போன தேவனுடைய ஜனங்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசி தரும் உறுதிப்பாடு இதுவே. அவர்களுடைய தலைவர்கள் அவர்களைத் தள்ளி, ஏமாற்றினார்கள், அவர்களுடைய வாழ்க்கையை கொள்ளையிட்டு, மேய்ப்பர்கள் (தேவனுடைய) மந்தையை மேய்க்காமல், “தங்களையே மேய்த்தார்கள்” (வ.8). அதன் விளைவாக,  “பூமியின் மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை” என்று தன்னுடைய ஜனங்களைக் குறித்து தேவன் கூறுகின்றார் (வ.6).

“என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (வ.15), அவருடைய இந்த வாக்கு இன்றைக்கும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டியது என்ன? சர்வ வல்ல தேவனையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். “நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்” (வ.11) என்பதாக அவர் கூறுகின்றார். இதுவே ஊறுதியாகப் பற்றிக் கொள்ளத் தகுந்த மீட்பளிக்கும் வாக்கு.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).