நான் கெளரவ் என்பவரோடு உறவாடிய பின்னர், அவர் வாழ்த்து தெரிவிக்க, ஏன் கைகளைக் குலுக்கிக் கொள்வதைவிட “மூடிய விரல்களை மோதிக்கொள்வதை” தெரிந்துகொண்டார் என்பதை நினைத்துப் பார்த்தேன். அவன் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதால், உள்ளங்கையில் ஏற்பட்ட காயத்தைக் காட்ட விரும்பாததால், அவன் கைகளைக் குலுக்குவதில்லை. மற்றவர்களால் அல்லது தானே தனக்குள்ளாக ஏற்படுத்திக் கொண்ட உட்காயங்கள் அல்லது வெளிக்காயங்களை, யாருமே காட்டிக் கொள்ள விரும்புவதில்லை என்பது உண்மைதான்.

கெளரவோடு பேசிக் கொண்டபின்பு, இயேசு கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள காயங்களை- அவருடைய கரங்களிலும், கால்களிலும்  ஆணிகள் துளைத்ததால் ஏற்பட்ட காயங்களும், விலாவில் ஈட்டி பாய்ந்ததால் ஏற்பட்ட காயத்தையும் குறித்து நினைத்துப் பார்த்தேன். தன்னுடைய காயங்களை மறைப்பதை அல்ல, அதனை கவனிக்கும்படி கிறிஸ்து விரும்புகின்றார்.

இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்பதைச் சந்தேகித்த தோமாவிடம் அவர், “நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” (யோவா.20:27) என்றார். தோமா அந்தக் காயங்களைப் பார்த்தபோது, அவன் கிறிஸ்துவின் அற்புதமான வார்த்தைகளைக் கேட்கின்றான், அவர் இயேசு என்பதை உறுதிபண்ணிக் கொண்டான். அவனுக்குள் நம்பிக்கை வந்தபோது, “என் ஆண்டவரே! என் தேவனே!” (வ. 28) என்றான். அப்பொழுது இயேசு, அவரைக் காணாதிருந்தும் அல்லது அவருடைய சரீரத்தின் காயங்களைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களுக்கு ஒரு சிறப்பான ஆசிர்வாதத்தைக் கூறுகின்றார். “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்’ (வ.29) என்கின்றார்.

இதில் மிகச் சிறப்பான செய்தி என்னவெனில், நம்முடைய பாவங்களின் நிமித்தம், அவர் காயப்பட்டார், நமக்கு விரோதமாகவும், பிறருக்கு விரோதமாகவும் செய்த பாவங்களுக்காக அவர் காயங்களை ஏற்றுக் கொண்டார். இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம், நம்முடைய பாவங்களும், அவரை விசுவாசித்து, தோமாவைப் போன்று இயேசுவை, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று அறிக்கை செய்கின்றவர்களின் பாவங்களும் மன்னிக்கப் பட்டது.