சிலவேளைகளில் என்னுடைய நாய், என்னுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, எனக்குச் சொந்தமான எதையாகிலும், தன்னுடைய வாயில் கவ்விக்கொண்டு, எனக்கு முன்பாக நடந்துவரும். ஒரு நாள், நான் என்னுடைய அறையில் எழுதிக் கொண்டிருந்த போது, எனக்குப் பின் புறமாக வந்த மாக்ஸ் என்ற என்னுடைய நாய், என்னுடைய பணப்பையை கவ்விக் கொண்டு வெளியேறியது. ஆனால் நான் அந்தக் காரியத்தை கவனிக்கவில்லை என்று மாக்ஸ் தெரிந்து கொண்டபோது, அது, பணப்பையைக் கவ்வியபடியே திரும்பி வந்து தன் மூக்கினால் என்னைத்தொட்டது, உற்சாகத்தில் அதன் கண்கள் உருண்டன, வாலை ஆட்டியது, அதனோடு விளையாட வரும்படி என்னைக் கடிந்து கொண்டது.

மாக்ஸின் இந்தச் செயல் எனக்கு சிரிப்பை உண்டாக்கினாலும், எல்லா நேரங்களிலும், முக்கியமாக நான் மற்றவர்களோடு நேரம் செலவிடும் போது, அது அவ்வாறு இருப்பதில்லை. நான் அதிக நேரத்தை என்னுடைய குடும்பத்தினரோடும், நண்பர்களோடும்  செலவிட வேண்டுமென விரும்புவதாலும், மற்றும் சிலவேலைகள் என்னுடைய மனதில் இடம் பிடித்திருப்பதாலும், எப்படியாகிலும் அந்த நாள் முடிவதற்குள் என்னுடைய அன்பு நாயிடம் சிறிது நேரம் செலவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு எனக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.

நம்முடைய பரலோகத் தந்தை, சர்வ வல்லவர், நம் ஒவ்வொருவரையும் மிக நெருக்கமாகச் சந்தித்து வருகின்றார். நம்முடைய நுரையீரலுக்குள் செல்லும் ஒவ்வொரு மூச்சையும், நம்முடைய வாழ் நாள் முடியும் மட்டும் தாங்கிப் பிடிக்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது, எத்தனை ஆறுதலாகவுள்ளது. அவர் தம் பிள்ளைகளுக்கு, “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசா.46:4) என்று வாக்களிக்கின்றார். 

தேவன் நமக்கென்று எப்பொழுதும் நேரம் செலவிடுகின்றார். நம்முடைய ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் புரி ந்துகொள்கின்றார். அது எத்தனை கடினமானதாயினும், சிக்கலானதாயினும், நாம் ஜெபத்தில் கூப்பிடும் போது அவர் அங்கேயிருக்கிறார். நமது இரட்சகரின் எல்லையில்லா அன்பினைப்பெற நாம் வரிசையில் காத்திருக்க அவசியமில்லை.