வாலஸ் ஸ்டேக்னரின் தாயார் ஐம்பதாவது வயதில் மரித்துப் போனார். வாலஸ், தன்னுடைய எண்பதாவது வயதில், தன்னுடைய தாயாருக்கு ஒரு குறிப்பு எழுதினார். “மிகப் பிந்திய ஒரு கடிதம்” என்ற அந்த கடிதத்தில், மிக கடுமையான நாட்களில், வளர்ந்து, திருமணம் புரிந்து, இரண்டு மகன்களையும் வளர்த்த ஒரு பெண்ணின் குணங்களைப் பாராட்டியிருந்தார். அவள், ஒரு மனைவியாக, தாயாராக இருந்து, அனைவரையும், விரும்பத்தகாதவர்களையும் ஊக்கப்படுத்துவார். தன்னுடைய தாயார், தன்னுடைய குரலின் வாயிலாக வெளிப்படுத்தின வல்லமையை நினைத்துப் பார்த்தார். “நீங்கள் பாடுவதற்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் நழுவ விடவில்லை” என்று எழுதுகின்றார். அவருடைய தாயார் வாழ்ந்த நாட்களெல்லாம், சிறிதும் பெரிதுமான ஆசிர்வாதங்களுக்காக நன்றி செலுத்திப் பாடினார். 

சங்கீதக்காரனும், தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பாடினார். அவர் மகிழ்ச்சியான நாட்களிலும் பாடினார், துன்ப நாட்களிலும் பாடினார். அந்தப் பாடல்கள் எந்த கட்டாயத்தின் பேரிலும் பாடப்படவில்லை, அவை, “வானத்தையும், பூமியையும் உண்டாக்கினவரையும்” (146:6), பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறவரையும்” (வ.7), “குருடரின் கண்களைத்  திறக்கிறவரையும்” (வ.8), “திக்கற்ற பிள்ளையையும், விதவையையும் ஆதரிக்கிறவரையும்” (வ.9) போற்றிப் பாடப் பட்ட பாடல்கள். “யாக்கோபின் தேவனைத்” தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்களுக்கு, பெலனாக இருக்கிறவரும், “என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவரும்” ஆகிய தேவனைப் பாடுவதே உண்மையான, பாடலோடு கூடிய வாழ்க்கை முறை (வ.5-6).

நம்முடைய குரல் நன்றாயிருக்கின்றதற்காக அல்ல, நம்மை நன்மையால் நிரப்பினவரைப் போற்றிப் பாடுவதே, நம் வாழ்க்கை முறையாயிருக்கட்டும். ஒரு பழைய பாடலில் “என் உள்ளத்தில் ஒரு பாடலுண்டு” எழுதப் பட்டுள்ளதைப் போன்று, நம்முடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாடல்கள் எழும்பட்டும்.