Archives: டிசம்பர் 2019

அழகிய கனி

மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம் உருவாவதற்கு காரணமாயிருந்த ரெபேக்கா லெமோஸ் ஓடெரோ என்பவர், “குழந்தைகளே, நீங்கள் ஒரு விதையைத் தோட்டத்தில் எங்கேயாகிலும், நீங்கள் விரும்பும் இடத்தில் எறியுங்கள், பின்னர், அதிலிருந்து என்ன வெளியாகிறது என்று பாருங்கள்” என்றார். இது சரியான தோட்டக் கலையல்ல, எனினும், ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு ஜீவனை உருவாக்கக்கூடிய ஆற்றல் பொதிந்துள்ளது என்ற உண்மையை, அது வெளிப்படுத்தியது. 2004ஆம் ஆண்டிலிருந்து மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம், பள்ளிகளிலும், குறைந்த வருமானம் உள்ள பகுதிகளிலும் தோட்டங்களை உருவாக்கியது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களைப் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்குத் தோட்ட வேலைக்கான திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. “பட்டணங்களில் பசுமை நிறைந்த இடங்களை உருவாக்குவதன் மூலம், குழந்தைகள் சுற்றுப்புறங்களிலுள்ள அழகிய இடங்களில் பயன் தரும் காரியங்களைச் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது” என்றார், ரெபேக்கா.

இயேசு கிறிஸ்து, விதை விதைப்பதைக் குறித்து ஒரு கதையைக் கூறினார். இந்த விதைகள் நூறு மடங்கு விளைச்சலைத் தந்தன (லூக்கா 8:8) இங்கு, தேவனுடைய வார்த்தைகளாகிய விதைகள் நல்ல நிலத்தில் விதைக்கப் படுகின்றது. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.”  என்பதாக விளக்குகின்றார் (வச. 15).

நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்பதற்கான ஒரேவழி கிறிஸ்துவில் நிலைத்திருப்பதேயாகும் (யோவா. 15:4). கிறிஸ்து நமக்கு கற்பித்ததைப் போன்று, நாம் அவரைப் பற்றிக் கொண்டால், ஆவியானவர் நம்மில் அவருடைய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலா. 5:22-23), ஆகிய இவற்றை நம்மில் காணச்செய்வார். நம்மில் உருவாக்கிய இந்தக் கனிகளின் மூலம், மற்றவர்களின் வாழ்வைச் சந்திக்கச் செய்வார், அவர்களின் வாழ்வும் கனிதரும் வாழ்வாக மாற்றப் படும். இது ஓர் அழகிய வாழ்வை உருவாக்கும்.

உருவாக்கப்பட்ட குறைபாடு

எருசலேம் நகரத்தின் கிழக்குப் பக்கத்தில், இயற்கையில் அமைந்த ஒரு நீரூற்று உள்ளது. அந்தக் காலத்தில், அப்பட்டணத்திற்குத் தண்ணீர் தரக்கூடிய ஒரே ஊற்று அதுதான். ஆனால், அது பட்டணத்தின் அலங்கத்திற்கு வெளியே அமைந்துள்ளது. எருசலேம் நகரத்தைப் பிடிப்பதற்கு உகந்த இடம் இதுதான். ஊடுருவ முடியாத இப்பட்டணத்தை, எதிரிகள் வளைந்து கொண்டு, இந்த நீரூற்றை வேறு திசைக்குத் திருப்பவோ, அல்லது அதன் நீரைத் தடுத்து நிறுத்தவோ செய்தால், அப்பட்டணத்தாருக்குச் சரணடைவதை விட வேறு வழியில்லை.

இந்த பெலவீனத்தையறிந்த எசேக்கியா ராஜா, கடினமான மலை வழியே 1750 அடி நீளமுள்ள கால்வாயை வெட்டி, அதன் வழியே தண்ணீரை பட்டணத்துக்குள் உள்ள குளத்திற்குக் கொண்டு வந்தான் (2 இரா. 20:20, 2 நாளா. 32:2-4). இவை எல்லாவற்றிலும், அதைச் செய்தவரை, அவர் நோக்காமலும், அதை ஏற்படுத்தி, தூரத்திலிருந்து வரும்படி திட்டம் பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள், என்று எசேக்கியாவைக் குறித்து கூறுகின்றார் (ஏசா. 22:11) எதைத் திட்டம் பண்ணினார்?

எருசலேம் பட்டணத்திற்குத் தண்ணீர் தரும் ஊற்றை, பட்டணத்திற்கு வெளியே இருக்குமாறு திட்டமிட்டவர் தேவன் தாமே. அந்தப் பட்டணத்தினுள் வாசம் பண்ணுவோர், தங்களுடைய இரட்சிப்புக்கு தேவனாகிய கர்த்தரையே சார்ந்திருக்கும்படி அவர்களுக்கு தொடர்ந்து நினைப்பூட்டவே, அந்த  நீரூற்றை பட்டணத்திற்கு வெளியே அமைத்தார். 

இது நம்முடைய குறைபாடுகளும், நம்முடைய நலனுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? அப்போஸ்தலனாகிய பவுலும், தனக்கிருந்த குறைகளைக் குறித்துக் கூறும் போது, “ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” (2 கொரி. 12:9) என்கின்றார். எனவே, நாமும் நமக்கிருக்கின்ற குறைகளை, தேவனுடைய பெலன் நம்மில் வெளிப்படும் படி, கொடுக்கப்பட்ட ஈவுகளாகக் கருதுவோமா?

அன்பில் கழுவப்படல்

தெற்கு கலிஃபோர்னியாவிலுள்ள ஓர் ஆலயத்தின் விசுவாசிகள், தேவனுடைய அன்பை செயல் முறையில் காண்பிக்க விரும்பினர். அவர்கள் அருகிலுள்ள, இயந்திரம் மூலம் துணி துவைக்கும் இடத்தில் கூடி, தங்களின் சமுதாயத்தில் தேவையுள்ளோருக்கு, துணிகளைத் துவைத்து, மடித்து, அவற்றோடு, சூடான உணவையும், மளிகை சாமான்கள்  அடங்கிய பைகளையும் சேர்த்து வழங்கினர்.

இவ்வாறு செய்யும் போது, ஒரு தன்னார்வத் தொண்டர் கண்டுபிடித்தது என்னவெனில், “அம்மக்களோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைப்பதாகவும், அவர்களுடைய கதைகளைக் கேட்க முடிந்ததாகவும்” கூறினார். அவர்கள் இயேசுவோடு சரியான உறவை வைத்திருப்பதால், தங்களுடைய விசுவாசத்தை வாழ்வில் காட்ட விரும்பினர், அன்பான வார்த்தையாலும், அன்பின் செய்கையாலும் மற்றவர்களுக்கு உதவி, அவர்களோடு உண்மையான உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினர்.

ஒவ்வொரு விசுவாசியினுடைய உண்மையான விசுவாசத்தின் விளைவை, அவர்களுடைய அன்பின் கிரியைகளில் காணலாம் என  அப்போஸ்தலனாகிய யாக்கோபு  கூறுகின்றார். “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” (யாக். 2:17) என்று சொல்கின்றார். நாம் தேவனை விசுவாசிக்கிறோம் என்று அறிக்கையிடும் போது, அவருடைய பிள்ளைகளாகின்றோம், நாம் மற்றவர்களுக்குப் பணிசெய்வதன் மூலம் தேவனுக்கு ஊழியம் செய்யும் போது, இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவரைப் பின்பற்றுகிறவர்களாகிறோம் (வச. 24) ஆவியும், சரீரமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் போல, விசுவாசமும், ஊழியமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன (வச. 26) என கிறிஸ்துவின் வல்லமை நம் மூலமாக, நம்மில் வெளிப்படுவதை அழகாகக் காட்டுகின்றார்.

தேவன் சிலுவையில் வெளிப்படுத்தின தியாகத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அவருடைய அன்பினால் முற்றிலும் கழுவப்படும் போது, நம்முடைய உண்மையான விசுவாசம், நாம் முழுமனதோடு பிறருக்குச் செய்யும் அநேகக் கிரியைகளினால் விளங்கும்.

நீ ஒரு போதும் மறக்கப்பட்டுப் போவதில்லை

பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, பியானோவின் அடிப்படை பாடங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதை என்னுடைய பிள்ளைகளுக்கு நிரூபித்துக்காட்ட, நான் பியானோவை வாசிக்கும்படி அமர்ந்தேன். சி மேஜர் இசையில் ஆரம்பித்தேன். கடந்த  இருபது ஆண்டுகளில் மிகச் சிறிய அளவே வாசித்திருப்பேன். ஆனால் என்ன ஆச்சரியம்!  இசை இன்னமும் என் நினைவிலிருக்கிறது, எனக்கு ஒரு தைரியமும் கிடைத்தது, நான், என் நினைவிலிருந்து, ஏழு வெவ்வேறு ஆதாரச் சுருதிகளையும், ஒவ்வொன்றாகப் போட ஆரம்பித்தேன். நானே  அதிர்ந்து போனேன்! பல ஆண்டுகளின் பயிற்சி, அந்தப் பாடங்களை என்னுடைய மனதில் பதித்து விட்டது, விரல்களுக்குத் தேவையான நுட்பங்களும், என்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அவை உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்துவிட்டன.

சில காரியங்களை, நாம் மறக்கவே முடியாது. தேவன் தம்முடைய பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பும், நம்முடைய மங்கிப் போகும் நினைவைப் போல் அல்லாமல், அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. உண்மையில் தேவன் ,நம்மை மறப்பவரல்ல. ஆனால், புறதேசத்திற்கு சிறைப்பட்டுப் போன இஸ்ரவேலர்கள், கர்த்தர் நம்மைக் கைவிட்டார், ஆண்டவர் நம்மை மறந்தார் என்று சொல்கின்றார்கள், (ஏசாயா49:14). ஏசாயா தீர்க்கன் மூலமாக தெளிவாக கூறவிரும்புகிறார். “ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” (வ.15) என்று உறுதியாகக் கூறுகின்றார். 

தேவன் தன்னுடைய மாறாத அன்பை, அவர்கள் அறிந்து கொள்ளும்படியும் தன்னுடைய பிள்ளைகளின் மீது அவர் கொண்டுள்ள கரிசனையை, அவர்கள் தெரிந்து கொள்ளும் படியும், “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்,” (வ.16) என்கின்றார். இது, அவருடைய பிள்ளைகளின் மீது அவர் எத்தனை விழிப்பாயிருக்கின்றார் என்பதைக் காட்டுகிறது. அவர்களுடைய முகங்களும், பெயர்களும் எப்பொழுதும் அவருக்கு முன்பாக நிற்கின்றன.

இன்றும் கூட, நாம் தேவன் நம்மை மறந்து விட்டார், கைவிட்டு விட்டார் என்று எளிதில் கூறிவிடுகின்றோம். ஆனால் நம்மை அவர் உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார் என்பது எத்தனை ஆறுதலாயிருக்கின்றது. இப்பொழுதும் நம்முடைய தந்தை நம்மை மறக்கவில்லை, நம்மைப் பாதுகாக்கின்றார், நம் மீது அன்பு செலுத்துகின்றார் என்பதை மறவாதே.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.