வீடுகளை விற்பனை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்த சிநேகிதி ஒருவர் சமீபத்தில் புற்று நோய் தாக்கப்பட்டு மரித்துவிட்டார். நானும் என் மனைவியும் பாற்ஸியைப் பற்றிய கடந்த கால அநுபவங்களை நினைவுபடுத்திக் கொண்டிருந்த போது, பாற்ஸி ஒரு மனிதனை இயேசுவின் மீதுள்ள விசுவாசத்திற்குள் வழிநடத்தியதைக் குறித்து என் மனைவி சூ நினைவுபடுத்தினாள். இப்பொழுது அவர் எங்களுக்கு ஒரு நல்ல நண்பராக இருக்கின்றார்.

எங்களுடைய சமுதாயத்தில் பல குடும்பங்கள் வசிப்பதற்கு ஏற்ற இடங்களை பாற்ஸி கண்டுபிடித்துக் கொடுத்ததோடல்லாமல், அவர்களுக்கு ஒரு நிலையான வாசஸ்தலம் உண்டு என்பதையும் உறுதியாக்கிக்கொள்ள உதவினாள்.

இயேசு கிறிஸ்து நமக்காகச் சிலுவைக்குச் செல்ல ஆயத்தமானபோது, அவர் நமக்குத் தரப்போகிற நித்திய வீட்டைப்பற்றி அதிக ஆர்வம் காட்டினார். அவர் தம் சீஷரிடம், “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்” என்றும் அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களுக்கு கொடுக்கும்படி “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு (யோவா. 14:2). எனவும் கூறினார்.

நாம் அனைவரும் நம்முடைய வாழ்வில் நல்ல வீடொன்றில் இருக்க விரும்புகின்றோம். நம் குடும்பத்தினரோடு உணவருந்தவும், தூங்கவும் ஒருவரோடொருவர் மகிழ்ந்திருக்கவும் அது ஒரு சிறப்பான இடம். நாம் நம்முடைய மறுவாழ்வில் காலெடுத்து வைக்கும் போது, அங்கு தேவன் நமக்குத் தரப்போகிற நிரந்தர குடியிருப்பைக் குறித்து கரிசனை கொள்கின்றார் என்பதை நினைக்கும் போது எத்தனை ஆச்சரியமாயிருக்கிறது. நமக்கு ஜீவனைக் கொடுத்து, அது பரிபூரணப்படச் செய்கின்ற தேவனை ஸ்தோத்திரிப்போம் (யோவா. 10:10).  இப்பொழுது அவருடைய பிரசன்னம் நம்மோடிருக்னிற்து. பின்பு நாம் அவரோடு என்றென்றைக்கும் இருக்குபடி அவர் நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுகின்றார் (14:3).

தேவன் தம்பேரில் நம்பிக்கையாயிருப்பவர்களுக்கு எதை ஆயத்தமாக வைத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்து, பாற்ஸியைப் போன்று பிறரையும் இயேசுவண்டை வழி நடத்தும் பணியை ஒரு சவாலாக எடுத்துக்கொள்வோம்.