படுக்கையிலேயே தன் நாட்களைக் கழிக்க நேர்ந்தபோதும், 92 வயதான மோரீ பூகார்ட், மிஷிகனில் உள்ள ஆதரவற்ற, வீடில்லாத மக்களுக்காக தொப்பிகள் பின்னினார். அவர் 15 ஆண்டுகளில் 8000த்துக்கும் அதிகமான தொப்பிகளைப் பின்னியதாகக் கூறப்பட்டது. தன்னுடைய சுகவீனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னால் முடிந்த உதவியைச் செய்தார். அவ்வாறு உதவி செய்வது தனக்கு மகிழ்ச்சியைத் தந்ததாகவும், வாழ்க்கையில் தனக்கு ஒரு பிடிப்பைக் கொடுத்ததாகவும் கூறினார். “நான் என் ஆண்டவரிடம் போகும்வரை இதைச் செய்வேன்” என்று கூறிய அவர் பிப்ரவரி 2018ல் ஆண்டவரிடம் சென்றார். அவர் பின்னிய தொப்பிகளைப் பெற்ற மனிதர்களுக்கு அவரைப் பற்றியோ, ஒவ்வொரு தொப்பியையும் பின்ன அவர் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதோ தெரியப்போவதில்லை. ஆனால் அன்பினால் அவர் செய்த அந்த சிறிய உதவி இன்று உலகமெங்கும் பல பேரை ஊக்குவிக்கிறது.

நம்முடைய கஷ்டங்களைக் கருத்தில் கொள்ளாமல், நமக்கு மேலாக மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய அன்பான, கிருபை நிறைந்த இரட்சகர் இயேசு கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் செயல்படலாம் (பிலிப். 2:1-5). ராஜாதி ராஜா, மனுஷ சாயலான தேவன், உண்மையான தாழ்மையுடன் ஒரு அடிமையின் தன்மையைத் தரித்துக்கொண்டார் (வச. 6-7). அதிகபட்ச தியாகமாக, தன்னுடைய உயிரைக் கொடுத்து, நமக்குப் பதிலாக சிலுவையில் அறையுண்டார் (வச. 8). இயேசு நமக்காக – பிதாவாகிய தேவனின் மகிமைக்காக – எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தார் (வச. 9-11).

இயேசுவை விசுவாசிப்பவர்களாக, மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதும், மற்றவர்களுக்கு உதவுவதால் அவர்கள்மீதான கரிசனையை வெளிப்படுத்துவதும், நமக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு உரிமை. கொடுப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைத்தாலும், ஒரு பணியாளின் தாழ்மையைத் தரித்துக்கொள்ளலாம். மற்றவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நம்மால் முடிந்ததைச் செய்வதற்கு தருணங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.