ஒரு அர்ப்பணிப்பு விழாவில், பிராந்திய ஆப்பிரிக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட வேதாகமத்தின் பிரதி ஒன்று அந்தப் பகுதியின் தலைவருக்கு அளிக்கப்பட்டது. அந்த மொழிபெயர்ப்பு முயற்சியை பாராட்டும் விதமாக, அந்தத் தலைவர் வேதாகமத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, “ஆண்டவர் எங்கள் மொழியை புரிந்து கொள்கிறார்! இப்போது எங்கள் தாய் மொழியிலேயே நாங்கள் வேதாகமத்தை வாசிக்கமுடியும்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

நமது மொழி எதுவாக இருந்தாலும், நம் பரம பிதா அதை புரிந்துகொள்கிறார். ஆனால் பல வேளைகளில் நமது இருதயத்தின் ஆழத்தில் உள்ள ஏக்கங்களை அவரிடம் வெளிப்படுத்த முடிவதில்லை. நாம் என்ன மன நிலையில் இருந்தாலும், ஜெபிக்கும்படி பவுல் நம்மை ஊக்குவிக்கிறார். இந்த உலகத்தின் வேதனைகள் மற்றும் நமது துன்பங்கள் பற்றி “சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது” (ரோமர் 8:22) என்கிறார். அதை பரிசுத்த ஆவியானவர் நமக்காக இடைபடுவதோடு ஒப்பிடுகிறார். “ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (வச. 26) என்று கூறுகிறார்.

தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம்மை முற்றிலும் அறிவார். நமது வாஞ்சைகள், நமது இருதயத்தின் நினைவுகள், நம் மனதில் இருக்கும் வெளிப்படுத்தாத வார்த்தைகள் ஆகிய அனைத்தையும் அவர் அறிவார். நாம் அவரோடு பேச அவர் உதவுகிறார். குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நாம் மாறும்படி, பரிசுத்த ஆவியானவர் நம்மை ஏவுகிறார் (வச. 29).

நமது பரம பிதா நம் மொழியை புரிந்துகொள்கிறார். அவரது வார்த்தையாகிய வேதாகமம் மூலம் நம்மோடு பேசுகிறார். நாம் சிரத்தை இல்லாமலோ, சிறியதாகவோ ஜெபம் செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர் நம் மூலமாக பிதாவோடு பேசி, நமக்கு உதவுகிறார். ஜெபத்தின்மூலம் நாம் அவரோடு பேச அவர் வாஞ்சையாய் இருக்கிறார்.