அது ஒரு சோர்வுக்குள்ளான வாரம். நான் எதிலும் ஆர்வமில்லாதவனாகவும், சலித்தும் காணப்பட்டேன். அது ஏனென்றும் எனக்குத் தெரியவில்லை.

அந்த வாரக் கடைசியில் என்னுடைய அத்தை ஒருவருக்கு சிறு நீரகம் செயலிழந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். நான் அவர்களைப் போய் பார்க்க வேண்டும், ஆனால், நான் அதனைத் தள்ளிப்போட நினைத்தேன். ஆயினும் நான் என்னைத் திடப்படுத்திக் கொண்டு, ஒரு நாள் அவர்களுடைய இடத்துக்குச் சென்று, அவர்களோடு உணவருந்தி, பேசிக் கொண்டிருந்துவிட்டு, இணைந்து ஜெபித்துவிட்டு, ஒரு மணி நேரத்திற்குப்பின் வந்தேன். பல நாட்களாக இருந்த சோர்வு நீங்கியவனாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னையே நான் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, பிறர் மீது கவனம் செலுத்திய போது என்னுடைய உள்ளத்தின் சோர்வு அகன்றது.

பிறருக்குக் கொடுக்கும் போது, அதைப் பெற்றுக் கொள்பவரின் நன்றியுணர்வைக் காணும்போது, கொடுப்பவரின் மனதிற்கு, அது நிருப்தியைக் கொடுக்கும் என உளவியலாளர் கூறுகின்றனர். மனிதர்கள் தாராளமாய் கொடுப்பதில் சிறந்தவர்கள் என சில வல்லுனர்கள் நம்புகின்றனர்.

எனவே தான், தெசலோனிகேயர் சபையின் விசுவாசக் குடும்பத்தினரைப் பவுல், “பலவீனரைத் தாங்குங்கள்” (1 தெச. 5:14) என ஊக்குவிக்கின்றார். முன்னதாக இயேசுவின் வார்த்தைகளான, “ வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (அப். 20:35) என்பதையும் பவுல் குறிப்பிடுகின்றார். ஒரு வேளை இது பொருளுதவி செய்வதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், நம்முடைய நேரத்தையும் ஆற்றலையும் கொடுப்பதையும் இது குறிக்கும்.

நாம் கொடுக்கும் போது, தேவன் அதை எவ்வாறு கருதுவார் என்பதை நம்மால் உணரமுடியும். ஏன் தேவன் நம்மீது இத்தனை அன்பைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகின்றார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவருடைய மகிழ்ச்சியிலும், அவர் நம்மை ஆசீர்வதிப்பதால் அடையும் திருப்தியிலும் நாமும் பங்கு பெறுகின்றோம். நான் என்னுடைய அத்தையை மீண்டும் சீக்கிரத்தில் போய் பார்ப்பேன்.