நானும் என்னுடைய கணவனும் சியாட்டில் என்ற இடத்திற்கு, அவருடைய சகோதரியின் அருகிலே வாசம் பண்ணும்படி நகர்ந்த போது, எங்களுக்கு எங்கே தங்குவது, எங்கு வேலை செய்வதென்று தெரியவில்லை. அருகிலுள்ள ஒரு தேவாலயம் நாங்கள் தங்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவியது. அது ஒரு வாடகை வீடு, அநேக படுக்கையறைகளைக் கொண்டது. நாங்கள் ஓர் அறையில் தங்கிக் கொண்டு மற்றவற்றை வெளிநாட்டு மாணவர்கள் தங்குவதற்கு வாடகைக்குக் கொடுக்கலாம். எனவே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாங்கள் அந்நியரை வரவேற்கும் அந்நியராக இருந்தோம். எங்களுடைய வீட்டையும் ஆகாரத்தையும் உலகெங்கிலிருந்தும் வந்த மக்களோடு பகிர்ந்து கொண்டோம். நாங்களும் எங்கள் வீட்டில் தங்கியிருப்போரும் டஜன் கணக்கான வெளிநாட்டு மாணவர்களை ஒவ்வொரு வெள்ளி இரவும் வேதாகமத்தைக் கற்றுக்கொள்ள அழைத்தோம்.

நம் வீட்டைவிட்டு வெகுதொலைவில் இருப்பது என்ன என்பது தேவனுடைய ஜனங்களுக்குத் தெரியும். அநேக நூற்றாண்டுகள் இஸ்ரவேலர் அந்நியராகவும், அடிமைகளாகவும் எகிப்து தேசத்தில் இருந்தனர். லேவியராகமம் 19ல் அவனவன் தன் தன் “தாயையும், தகப்பனையும் கனம் பண்ணு” “களவு செய்யாதே” (வச. 3,11) என்ற நன்கறிந்த கட்டளைகளோடு உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற அந்நியனை சுதேசி போல எண்ணி கவனி, ஏனெனில் நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயும் பயந்துமிருந்தீர்கள் (வச. 33-34) எனக் கூறுகின்றார்.

தேவனைப் பின்பற்றுகிறவர்களாகிய நம்மில் அநேகருக்கு அகதிகளாக வாழ்ந்த அனுபவம் இல்லை. ஆனால், அந்த உலகில் அந்நியரைப் போல வாழ்தல் எவ்வாறிருக்கும் (1 பேத. 2:11) எனத் தெரியும், ஏனெனில் நாம் இப்பூமிக் குரியவர்களல்ல, நம்முடைய விசுவாசப் பயணம் பரலோக ராஜ்ஜியத்தை நோக்கியேயிருக்கிறது. நாம் உபசரிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும்படி அழைக்கப்பட்டிருக்கின்றோம். அந்நியரை கிறிஸ்துவின் குடும்பத்திற்குள் வரவேற்கும் அந்நியராயிருக்கிறோம். சியாட்டிலில் நானும் என் கணவரும் அனுபவித்த உபசரனை, நாங்களும் மற்றவர்களை வரவேற்கக் கற்றுத் தந்தது. இதுவே இருதயத்தில் கிறிஸ்துவின் குடும்பமாயிருத்தல் (ரோம. 12:13).