டொபாகோ தீவின் கடற்கரையிலிருந்து சற்று உள்ளே, கரிபியன் கடலுக்குள் சென்று ஆழ்கடலை பார்வையிட செல்லும்போது சுவாசிப்பதற்கு தேவையான உடையை அணிந்துகொள்வது அவசியம் என்று கூறி, என்னுடைய குழந்தைகளை சம்மதிக்கச் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் உள்ளே சென்று திரும்பிய போது மிகவும் மகிழ்ச்சியோடு, “அங்கே ஆயிரக்கணக்கான வகைகளில் மீன்கள் இருக்கின்றன. அது மிகவும் அழகாயிருக்கின்றது. இத்தனை வண்ணமயமான மீன்களை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை” என்றனர்.

அந்தக் கடலின் மேற்பரப்பைப் பார்க்கும் போது, அது எங்கள் வீட்டினருகிலுள்ள நல்ல நீர் ஏரிபோலவேயிருந்ததால், அதன் அடியில் மறைந்திருக்கும் அந்த அழகை எங்கள் குழந்தைகள் எதிர்பார்க்கவில்லை.

சாமுவேல் தீர்க்கதரிசி பெத்லகேமிற்கு ஈசாயின் குமாரரில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணச் சென்றார். மூத்த குமாரன் எலியாபை சாமுவேல் பார்த்த போது அவனுடைய தோற்றத்தை வைத்து, சரியான நபரைக் கண்டு கொண்டதாக எண்ணினான். ஆனால், தேவன் எலியாபைப் புறக்கணித்தார். கர்த்தர் சாமுவேலை நோக்கி, “நீ இவனுடைய முகத்தையும் சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம். …மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன், மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கின்றார்” (1 சாமு. 16:7) என்றார்.

எனவே சாமுவேல் இன்னமும் வேறே பிள்ளைகள் இருக்கின்றனரா? எனக் கேட்டார். ஈசாயின் இளைய மகன் அப்பொழுது அங்கேயில்லை. அவர்களுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். எனவே ஆட்களை அனுப்பி அந்த மகன் தாவீதை அழைப்பித்தான். தேவன் சாமுவேலிடம் அவனை அபிஷேகம்பண்ணும்படி சொன்னார்.

நாமும் அடிக்கடி மக்களை வெளித்தோற்றமாகவே பார்க்கின்றோம். அவர்களின் உள்ளத்தினுள், மறைந்துள்ள அழகைக்காண நேரம் எடுப்பதில்லை. தேவன் மதிப்பிடுவதைப் போன்று நாம் மதிப்பிடுவதில்லை. ஆனால், நாமும் புறத்தோற்றத்திற்குள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண நேரம் செலவிட்டால் மிகப்பெரிய பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்க முடியும்.