“நேசிக்கத் தகுந்தவள்!” என்ற வார்த்தைகளை, காலையில் எழுந்து தயாராகிக்கொண்டிருந்த என் மகளிடமிருந்து வந்தன. எனக்கொன்றும் புரியவில்லை. தன்னுடைய உறவினர் ஒருவரிடமிருந்து பெற்ற தன்னுடைய மேல் சட்டையைத் சுட்டிக் காட்டினாள். அந்தத்ச் சட்டையின் முன் பகுதியில் இந்த வார்த்தைகளிருந்தன. “நேசிக்கத்தகுந்தவள்” என்று நான் அவளைக் கட்டித் தழுவிக்கொண்டேன். அவளும் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டாள். “நீ நேசிக்கத்தகுந்தவள்” என நான் மீண்டும் கூறினேன். அவளுடைய சிரிப்பு இன்னும் அதிகரித்தது. அவள் நகர்ந்து சென்றபோது இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே சென்றாள்.

நான் மிகச் சிறந்த தந்தையல்ல ஆனால் அந்த நேரத்தில் நான் சரியான தந்தையாகச் செயல்பட்டேன். தற்செயலாய் நடந்த அந்த அழகிய உரையாடலின் போது, என்னுடைய நிபந்தனையற்ற அன்பைப் பெற்ற என் மகளின் பிரகாசமான முகத்தைக் கவனித்தேன். அது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு சித்திரம் போலிருந்தது. அவளுடைய சட்டையிலிருந்த வார்த்தைகளும், அவளுடைய தந்தை அவளைக் குறித்து எண்ணியிருப்பதும் பொருந்தியிருக்கிறது என்பதை அவள் அறிவாள்.

நாம் அளவற்ற அன்பினைக் கொண்டுள்ள ஒரு தந்தையால் நேசிக்கப்படுகிறோம் என்பதை நம்மில் எத்தனை பேர் நம் இருதயத்தில் உணர்ந்திருக்கின்றோம்? சிலவேளைகளில் இந்த உண்மையோடு நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். இஸ்ரவேலரும் அப்படியே உணர்ந்தனர். அவர்களுடைய சோதனைகளின் போது தேவன் அவர்களை நேசிக்கவில்லை என்று எண்ணினர். ஆகையால், எரேமியா 31:3ல் தீர்க்கதரிசி, தேவன் அவர்களுக்கு முன்பு கூறியிருந்ததை நினைவுபடுத்துகின்றார். “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” என்று தேவன் விளம்பியுள்ளார். நாமும் இத்தகைய நிபந்தனையற்ற அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் நம்முடைய காயங்கள், ஏமாற்றங்கள், தவறுகளினால் நாம் நேசிக்கப்பட முடியாதவர்கள் என்று நினைக்கிறோம். தேவனுடைய கரங்கள் ஒரு நேர்த்தியான தந்தையின் கரங்கள், அவருடைய அன்பிற்குள் இளைப்பாறும்படி நம்மை அழைக்கின்றன.