நாம் ஒவ்வொருவரும் தேவ கரத்தினால் படைக்கப்பட்ட அசல்கள். யாருமே தானாகவே மனிதனாக மனுஷியாக தங்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. யாருமே தாலந்துமிக்கவர்களாக மெருகேற்றப்பட்டவர்களாக பிரகாசமானவர்களாக தானாக மாறிவிடவில்லை. தேவன் மட்டுமே நம் ஒவ்வொருவரையும் உண்டாக்கினார். நம்மை நினைத்த அவர் தமது விலையேறப்பெற்ற அன்பிலிருந்து நம்மை உருவாக்கினார்.

தேவன் உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை உருவாக்கினார். அதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்து உங்களை அவர் உருமாற்றிக் கொண்டே இருக்கிறார். நாம் முதிர்ச்சி பெற வேண்டுமென்பதே அவரது ஒரே குறிக்கோள். “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் நடத்திவருவார்” (பிலி. 1:6). உங்களை தைரியமானவர்களாகவும், பலமிக்கவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், இன்னும் சமாதானமிக்கவர்களாகவும், அதிக அன்பானவர்களாகவும், சுய ஆசையற்றவர்களாகவும், நீங்கள் விரும்புகின்ற நல்ல மனிதராக தேவன் உங்களை உருவாக்கி வருகிறார்.

“கர்த்தருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது” (சங். 100:5). தேவன் எப்போதும் உங்களை நேசிக்கிறார். அவர் இறுதிவரை உங்களுக்கு உண்மையாயிருப்பார்.

நிலைத்திருக்கும் அன்பை அவர் உங்கள் மீது பொழிகிறார். அதை அவர் விட்டுவிடமாட்டார். ஆனந்தத்தோடே அவர் சன்னதி முன் வருவதற்கு (100:2) இது ஒரு சரியான காரணம்.

இராகத்தோடே உங்களால் பாட முடியவில்லையென்றால் அவரை நோக்கி உரக்க சத்தமிடுங்கள்: “கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடுங்கள்” (வச. 1).