“உன் பிள்ளைப்பருவத்தில் நான் அதிகநேரம் வீட்டில் இல்லாததால், உன்னோடு சரியாக நேரம் செலவளிக்க முடியாமற்போயிற்று,” என்று என் தந்தை ஒருமுறை என்னிடம் கூறினார். ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் ஞாபகமில்லை. என் தந்தை, தன்னுடைய முழுநேர அலுவலக பணி முடிந்ததும், சிலநாட்கள், சாயங்கால வேளையிலே பாடகர் குழுவிற்கு பயிற்சி கொடுக்கும்படி ஆலயம் சென்றிடுவார். மேலும், எப்போதாவது, நான்கு பேர்கொண்ட ஒரு இசை குழுவுடன் சேர்ந்து இசைக் நிகழ்ச்சிக்காக ஒன்று அல்லது இரண்டு வார பயணம் மேற்கொள்வதுண்டு. இருப்பினும், என் வாழ்வின் மிகமுக்கியமான தருணங்களிலும், சில சாதாரண தருணங்களிலும் கூட அவர் என்னோடு இருந்துள்ளார்.

உதாரணத்திற்கு, நான் 8 வயதாய் இருந்தபொழுது, பள்ளி நாடகமொன்றில், ஒரு சிறிய கதாபாத்திரத்திலே நடித்தேன். மத்தியான வேளையிலே, அந்நாடகத்தை காண தாய்மார்கள் அனைவரும் வந்திருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு தகப்பனார் மட்டுமே வந்திருந்தார். அது என்னுடைய தந்தைதான். என்னையும் என் சகோதரிகளையும் அவர் எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதையும், நாங்கள் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அநேக சின்னஞ்சிறு செயல்கள் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், என் தாயாருடைய கடைசி காலத்தில், என் தந்தை அவரை மிகுந்த பரிவோடு கவனித்ததின் மூலம், தன்னலமற்ற அன்பு எப்படி இருக்கும் என்பதை நான் கற்றுக் கொண்டேன். என்னுடைய தந்தை குறையொன்றும் இல்லாதவரல்ல. ஆனால், எப்பொழுதும் நம் பரமபிதாவை குறித்த ஒரு சிறிய கண்ணோட்டத்தை அவர் எனக்கு காண்பித்துள்ளார்.

சில சமயம், இப்பூமியில் வாழும் தந்தைமார்கள், தங்கள் பிள்ளைகளை ஏமாற்றவும் காயப்படுத்தவும் கூடும். ஆனால், நம்முடைய பரமபிதாவோ, “உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர்” (சங். 1௦3:8). தேவனை நேசிக்கும் ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை கண்டிக்கும்பொழுதும், தேற்றும்பொழுதும், கற்பித்து வழிநடத்தும்பொழுதும், அவர்கள் தேவைகளை சந்திக்கும்பொழுதும், பரிபூரணராகி நம் பரமபிதாவை மாதிரியாக வெளிப்படுத்துகிறார்.