பிறந்து நான்கே நாளான தனதருமை மகளை ஏந்திக்கொள்ளும் பாக்கியத்தை என்னை நம்பி என் தோழி என்னிடம் தந்தாள். குழந்தையை நான் கையில் ஏந்திக்கொண்ட சிறிது நேரத்திலேயே அவள் அழத்தொடங்கினாள். அவளை நெருக்கமாக அணைத்து, அவளது தலையில் என் கன்னத்தை வைத்து அழுத்தி, லேசாக அசைத்து, மெல்லிய பாடலை பாடி அவளை அமைதிப்படுத்த முயன்றேன். அக்கறையுடன் நான் செய்த எந்த முயற்சியும் எடுபடவில்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக பெற்றோராக இருந்த எனது அனுபவம் கைகொடுக்கவில்லை. அவளை என்னால் சமாதானப்படுத்த முடியாமல் போகவே, ஆவலுடன் காத்திருந்த அவளது தாயாரின் கரத்திற்குள் அவளை வைத்தேன். அந்த நிமிடமே அமைதியானாள். அவளது அழுகுரல் ஓய்ந்தது, புதிதாய் பிறந்த அவளது பிஞ்சு உடலும் கலக்கம் மறந்து, பாதுகாப்பான இடத்திற்குள் வந்ததினால் தளர்ந்து நிம்மதியடைந்தது. தனது மகளை எப்படி சரியாக பிடித்து, தட்டிக்கொடுத்து தேற்றுவது என்று எனது தோழிக்கு நன்றாக தெரிந்திருந்தது.

மென்மையாக, நம்பகத்தன்மையுடனும், அக்கறையுடனும் ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தையை தேற்றுவாளோ, அதைப்போல்தான் தமது பிள்ளைகளை ஆறுதல்படுத்த தேவனும் தமது உதவிக்கரத்தை நீட்டுகிறார். சோர்ந்து போய் வருத்தத்துடன் இருக்கும்போது, அவர் நம்மை தமது கைகளில் அன்புடன் ஏந்திக்கொள்கிறார். நம் பிதாவும் சிருஷ்டிகருமான அவர் நம்மை முற்றிலும் அறிந்திருக்கிறார். ஆதலால், அவரை “உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் (அவரையே) நம்பியிருக்கிறபடியால், (அவர்) அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்” (ஏசா. 26:3).

இந்த உலகத்தின் பிரச்சனைகள் நமது இருதயத்தை போட்டு அழுத்தும்பொழுது, ஒரு அன்பான தகப்பனாக இருக்கும் அவர், தம் பிள்ளைகளான நம்மைக் காத்து, நமக்காக யுத்தம் செய்து நம்மை வழிநடத்துகிறார் என்பதை அறிந்து, அவருக்குள் ஆறுதலடைவோமாக.