என் மனைவி அற்புதமான கறிக் குழம்பு செய்வாள். சிறிது கறியோடு, தேவைக்கேற்ற நறுக்கிய உருளைக்கிழங்கு, சீனிக் கிழங்கு, செலரி (Celery) கீரை, காளான், காரட் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து மிக மிதமான சூட்டில் அதிக நேரம் வேகவிட வேண்டும். பிறகு அது நன்கு வெந்ததற்கு அடையாளமாக வீடெங்கும் மணம் வீசும். அதை சுவைக்கும்பொழுது, அதன் சுவை மகிழ்ச்சியளிக்கும். அப்பொருட்கள் எல்லாம் தனித் தனியாக கொண்டுவர முடியாத சுவையை, அவை யாவும் இணைந்து கொடுக்கின்றன. மிக மிதமான சூட்டில் அதிக நேரம் எடுத்து விளைவித்தாலும், அது என்னுடைய நன்மைக்கே.

“சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது,” என்கிற சொற்றொடரை பாடுகளின் அடிப்படையில் கூறின பொழுது, ‘ஒருங்கிணைந்த செயல்பாடு’ என்று நாம் இன்று உபயோகிக்கும் வார்த்தையின் மூல வார்த்தையை பவுல் உபயோகித்துள்ளார். “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோ. 8:28) என எழுதியுள்ளார். தேவன் துயரங்களை, துன்பங்களை விளைவிப்பவர் அல்ல, மாறாக அச்சூழ்நிலைகளை தன்னுடைய தெய்வீக திட்டங்களோடு இணைத்து நன்மை விளைவிக்கவே விரும்புகிறார் என்பதை ரோமர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என பவுல் விரும்பினார். “நன்மைக்கேதுவானது” என்று பவுல் குறிப்பிட்டது நிலையற்ற ஆசீர்வாதங்களாகிய சுகம், செழிப்பு, புகழ் அல்லது வெற்றியை அல்ல, மாறாக “தன்னுடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு” உரிய நன்மையை (வச. 29).

நம்முடைய பரம பிதா எல்லா துன்பங்களையும், துயரங்களையும், தீமைகளையும் ஒன்று சேர்த்து அவருடைய நாம மகிமைக்காகவும், நம்முடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காகவும் நன்மை விளைவிக்கும்படி செய்வதால், நாம் பொறுமையோடும், நம்பிக்கையோடும் காத்திருப்போமாக. ஏனெனில் அவர் நம்மை இயேசுவைப் போல மாற்ற விரும்புகிறார்.