எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஃபோ ஃபாங் சியாகட்டுரைகள்

நம்பகமானதும் பெலவீனமானதும்

“ஏய், போ ஃபாங்!” என்று என்னும் திருச்சபை சிநேகிதன் ஒருவன் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். அதில் “இந்த மாததத்தில் நடைபெறும் பராமரிப்புக் குழுவில், நாம் அனைவரும் யாக்கோபு 5:16 சொல்லுவதுபடி செய்ய முயற்சிக்கலாம். அவ்வாறு செய்வதின் மூலம் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை வெளிப்படையாய் பகிர்ந்துகொண்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும் நம்பிக்கையான சூழலை உருவாக்கக்கூடும் என்று சொன்னார்.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு ஒரு கணம் தெரியவில்லை. எங்கள் பராமரிப்புக் குழு உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருந்தாலும், நாங்கள் ஒருபோதும் எங்கள் வலிகள் மற்றும் வேதனைகளை ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதில்லை. பெலவீனமாய் இருப்பது பயமுறுத்தக்கூடிய காரியம்.

ஆனால் நாமெல்லாரும் பாவிகள்; நம் அனைவருக்கும் போராட்டங்கள் இருக்கிறது என்பதே உண்மை. நம் அனைவருக்கும் இயேசு தேவை. தேவனுடைய ஆச்சரியமான கிருபைகளைக் குறித்தும், கிறிஸ்துவை நாம் எந்த அளவிற்கு சார்ந்திருக்கிறோம் என்பதைக் குறித்தும் பேசுவது, கிறிஸ்துவில் தொடர்ந்து நம் நம்பிக்கையை வைப்பதற்கு நம்மை ஊக்குவிக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் நமக்கு பிரச்சனைகளே இல்லை என்பதுபோல் நடிப்பதை நிறுத்திக்கொள்வோம்.

“சரி, நாம் அதைச் செய்யலாம்” என்று பதிலளித்தேன். ஆரம்பத்தில் அது எனக்கு விகற்பமாய் தோன்றியது. ஆனால் ஒருவர் மனந்திறந்து பேச ஆரம்பித்த பின்பு, மற்றவர்களும் அதே வழியை பின்பற்றத் துவங்கினர். ஒருசிலர் எதையும் பேசாமல் மௌனம் காத்தாலும், அவர்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. அந்த பராமரிப்புக் குழுவின் இரண்டாம் பகுதியை “ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்” என்னும் யாக்கோபு 5:16ன் ஆலோசனையின் பிரகாரம் நிறைவுசெய்தோம்.

அன்றைய தினத்தில், கிறிஸ்துவின் ஐக்கியம் என்றால் என்ன என்பதை நாங்கள் விளங்கிக்கொண்டோம். கிறிஸ்துவின் மீதான நமது விசுவாசத்தின் நிமித்தம், நாம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக செயல்பட்டு, நம்முடைய பெலவீனத்திலும் போராட்டங்களிலும் மற்றவர்களின் உதவியையும் நாடமுடியும்.

அயலாரை நேசியுங்கள்

வாலிபர் முகாமில் நடந்த ஒரு வேடிக்கையான விளையாட்டு அது. ஆனால் அவ்விளையாட்டு எங்களுக்கு ஒரு பாடமாகவும் இருந்தது: அயலாரை  மாற்றுவதை விட, அவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்வது. வட்டத்தின் நடுவில் நிற்கும் ஒருவரைத் தவிர, அனைவரும் ஒரு பெரிய வட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். நின்று கொண்டிருந்தவர் அமர்ந்திருந்த ஒருவரிடம், “உன் அயலாரை நேசிக்கிறாயா?” என்று கேட்டார். அமர்ந்திருந்தவர் கேள்விக்கு இரண்டு வழிகளில் பதிலளிக்கலாம்: ஆம் அல்லது இல்லை. அல்லது அவர் விருப்பம்போல் தன் அயலாரை மாற்றியும் கொள்ளலாம்.

 

நிஜ வாழ்க்கையிலும் நமது "அயலாரை" தேர்வு செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? குறிப்பாக நம்மால் பழக முடியாத உடன் பணியாளர் அல்லது ,உங்களை தொந்தரவு செய்யும் வகையில் முரண்பாடான நேரங்களில் முரணான வேலைசெய்யும் பக்கத்து வீட்டுக்காரர் ஆயினும், நாம் அவர்களுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

 

இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்றபோது, தமக்குச் சொந்தமான மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முக்கியமான அறிவுரைகளை அவர்களுக்கு தேவன் தந்தார். "உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக" (லேவியராகமம் 19:18), இதில் மற்றவர்களைப் பற்றி தவறாக பேசாமல் இருப்பது, அவர்களைப் பற்றி தவறான செய்தியை பரப்பாமல் இருப்பது, அவர்களை நமக்கு சாதகமாக பயன்படுத்தாமல் இருப்பது, அவர்களிடம் ஏதேனும் தவறு இருக்குமாயின் அவர்களிடம் பகை கொள்ளாமல் அதை நேரே அவர்களிடம் சொல்லுவது - இவையாவும் அந்த அறிவுரையில் அடங்கும் (வவ. 9-18).

 

எல்லோரையும் நேசிப்பது கடினம் என்றாலும், இயேசு நமக்குள்ளும், நம் மூலமாகவும் செயல்படும்போது, மற்றவர்களை அன்பாய் நடத்துவது சாத்தியமாகும். நாம் அவருடைய ஜனமென்னும் அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ முற்படுகையில், அவ்வாறு செய்வதற்கான ஞானத்தையும் திறனையும் தேவன் அருளுவார்.                                                         

நன்றியுள்ள இருதயம்

ஹான்ஸ்லி பார்ச்மென்ட், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டார். டோக்கியோவில் நடைபெறும் தன்னுடைய அரையிறுதி ஒலிம்பிக் போட்டிக்கு செல்லுவதற்கு தவறான பேருந்தில் ஏறிவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக விளையாட்டில் உதவிசெய்யும் டிரிஜானா ஸ்டோஜ்கோவிச்சைச் சந்தித்தார். அவர் டாக்ஸியில் செல்லுவதற்கு சிறிது பணத்தைக் கொடுத்து உதவினாள். பார்ச்மென்ட், சரியான நேரத்திற்கு அரையிறுதிக்கு சென்று, 110 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதற்கு பின்பதாக, அவர் ஸ்டோஜ்கோவிச்சைக் கண்டுபிடித்து அவளது உதவிக்கு நன்றி தெரிவித்தார்.

லூக்கா 17ஆம் அதிகாரத்தில், சமாரியவைச் சேர்ந்த குஷ்டரோகியை இயேசு சுகமாக்கியதின் நிமித்தம் அவருக்கு நன்றி சொல்லுவதற்கு ஒருவன் மாத்திரம் திரும்பி வந்த சம்பவத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம் (வச. 15-16). இயேசு ஒரு கிராமத்திற்குள் பிரவேசிக்கிறார். அங்கு பத்து குஷ்டரோகிகளை சந்திக்கிறார். அவர் அனைவரும் சுகமடையும்படிக்கு விரும்பி, அனைவரும் கிருபையையும் வல்லமையையும் பெற்றுக்கொண்டனர். தாங்கள் சுகமானதைக் கண்டு பத்துபேரும் ஆச்சரிப்பட்டாலும், அதில் ஒருவன் மாத்திரம் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தினான். அவன் “உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்” (வச. 15-16). 

தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் ஒவ்வொரு நாளும் பல விதங்களில் அனுபவிக்கிறோம். உபத்திரவப்படும் சரியான நேரத்தில் பதில் பெறுவது என்பது, எதிர்பாராத விதமாய் அந்நியரிடத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் ஆச்சரியமான பலனாய் இருக்கும். சிலவேளைகளில் அவருடைய ஆசீர்வாதங்கள் என்பது நல்ல தட்பவெப்ப நிலை, வெளியரங்கமான சில காரியங்களாய் கூட இருக்கலாம். அந்த நன்றியுள்ள சமாரியனைப் போல் நாமும் தேவனுடைய கிருபைகளுக்காய் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.

வாய்ப்பை பயன்படுத்திக்கொள்

இருபது வயது நிரம்பிய ஷின் யி, பல்கலைக்கழகத்திற்கு போவதற்கு முன்னர் தன்னுடைய மூன்று மாத விடுமுறையில், இளைஞர் ஊழிய இயக்கத்தில் சேர்ந்து ஊழியம் செய்ய விரும்பினாள். ஆனால் கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில் ஒருவரையொருவர் நேரில் சந்திப்பது சாத்தியமில்லாததாய் தோன்றியது. ஆனால் ஷின் யி விரைவில் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். “நாங்கள் வழக்கம் போல் தெருக்கள், வணிக வளாகங்கள், துரித உணவு மையங்கள் போன்ற இடங்களில் மாணவர்களைச் சந்திக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் ஸ_ம் செயலி வழியாக கிறிஸ்தவ மாணவர்களுடன் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கவும், மற்ற மக்களிடம் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்” என்று சொன்னாள். 

அப்போஸ்தலர் பவுல் தீமோத்தேயுவை செய்யும்படிக்கு உற்சாகப்படுத்தியதை ஷின் யி செய்தாள்: “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” (2 தீமோத்தேயு 4:5). கேட்கப்படவேண்டிய சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் (வச. 3-4) என்று பவுல் தொடர்ந்து எச்சரிக்கிறார். ஆகையால் தீமோத்தேயு “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ண” ஆயத்தமானான். “எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்ல” (வச. 2) தீமோத்தேயு தயாரானான்.

நாம் எல்லோருக்கும் சுவிசேஷக அழைப்போ அல்லது பிரசங்கம்பண்ணும் பிரத்யேகமான அழைப்போ இல்லாதபோதிலும், நம்மை சுற்றியிருக்கிற மக்களுக்கு சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளலாம். இயேசுவை நம்பாமல் அவிசுவாசிகள் அழிந்துபோகின்றனர். விசுவாசிகளுக்கு பெலனும் உற்சாகமும் தேவைப்படுகிறது. தேவனுடைய உதவியோடு, சமயம் வாய்த்தாலும் வாய்க்கவிட்டாலும் திருவசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம்பண்ணுவோம். 

திங்கட்கிழமைக்காக நன்றி

திங்கட்கிழமை என்றாலே நான் பயப்படுவேன். நான் முன்பு வேலை செய்த இடத்திற்கு செல்ல ரயிலிலிருந்து இறங்கும்போது, என் அலுவலகக் கட்டிடத்தை அடைவதற்கு முன் வேண்டுமென்றே தாமதப்படுத்துவேன். குறித்த நேரத்திற்கு வேலையை முடிக்காவிட்டால் எரிச்சலடையும் முதலாளிகளை சந்திப்பது எனக்கு சவாலாய் தோன்றியது. 

நம்மில் சிலருக்கு, ஒரு புதிய வாரத்தை துவக்குவது மிகவும் கடினமாக இருக்கும். நம் வேலை ஸ்தலத்தில் நாம் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது கனப்படுத்தப்படாதவர்களாகவோ இருக்கலாம். சாலெமோன் ராஜா எழுதும்போது, பிரயாசத்தின் பலனை விவரிக்கிறார்: “மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது” (பிரசங்கி 2:22-23). 

ஞானமுள்ள ராஜா, வேலையின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கோ அல்லது அதை பலனுள்ள வகையில் மாற்றுவதற்கான ஆலோசனையை நமக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அதை பார்க்கும் கண்ணோட்டத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். நம்முடைய வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், தேவனின் உதவியோடு அதில் “திருப்தியடைய” அவர் நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 24). கிறிஸ்துவின் சுபாவங்களை நம்மில் பிரதிபலிக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்குவிக்கும்போது, அந்த திருப்தியை நாம் அடையலாம். அல்லது நம்மால் உதவிபெற்ற ஒருவருடைய வார்த்தைகளை நாம் கேட்கும்போது திருப்தியடையலாம். அல்லது, கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க தேவன் கொடுத்த ஞானத்தை பிரயோகிக்கும்போது நாம் திருப்தியடையலாம். நம்முடைய வேலைகள் கடினமானதாய் இருந்தாலும், தேவன் நம்மோடு இருக்கிறார். அவருடைய பிரசன்னமும் வல்லமையும் சிக்கலான தருணங்களில் நமக்கு ஒளிகொடுக்கும். அவருடைய துணையோடு, திங்கட்கிழமைகளை நாம் சமாளிப்போம். 

மெய்யான சுதந்திரம்

ஜானகி, கோவையில் உள்ள கிராமம் ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார். பல ஆண்டுகளுக்கு முன், 14 வயதில் திருமணமான கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து, பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைகளைக் குறித்த பாகுபாடு காரணமாக, அவரது குடும்பத்தினர் குழந்தையை அருகிலுள்ள ஆற்றில் போட்டுவிட விரும்பினர். குடும்பத்தாரின் கொடூர எண்ணத்தை அறிந்த ஜானகி, குழந்தையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, மறைமுகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார். தாய்க்கு தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் வேலைகளை தனது சொந்த வீட்டில் ஏற்படுத்திக்கொடுத்தார். அவர்களும் ஜானகியின் குடும்பத்தில் ஒரு அங்கமாய் மாறிவிட்டனர். ஜானகி அந்தக் குழந்தையைக் காப்பாற்றியது மட்டுமின்றி, அதின் எதிர்காலத்தில் அது ஒரு மருத்துவராய் மாறுவதற்கும் உதவினார். 

ஒருவருக்கொருவர் இரக்கம் செய்யும்படிக்கு, வேதம் அவ்வப்போது நமக்கு அறிவுறுத்தினாலும், சில சமயங்களில் நம்முடைய சொந்த கவலைகளை கடந்து செல்வது கடினம். தேவனை ஆராதிக்காமலும் பிறருக்கு சேவை செய்யாமலும், புசித்து குடித்து மகிழ்ந்திருந்த (சகரியா 7:6) இஸ்ரவேலை, சகரியா தீர்க்கதரிசி கண்டித்தார். தங்களுடைய உடைமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வதை புறக்கணித்து, மற்றவர்களுடைய தேவையை பொருட்படுத்த தவறினர். சகரியா, “நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும்,” (வச. 9-10) இருங்கள் என்று அறிவுறுத்துகிறார். 

நம் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது இயல்பு என்றாலும், மற்றவர்களின் தேவைகளை பொருட்படுத்தும்படிக்கு நம்முடைய விசுவாசம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. தேவனிடத்தில் அநேக ஆஸ்திகள் இருக்கிறது. அந்த நிறைவில் சிலவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்க நம்மைப் பயன்படுத்துகிறார்.

 

இடுக்கமான வாசல் உணவகம்

சுவையான நொருக்குத் தீனிகள், பாலாடைக் கட்டிகள், இறைச்சி என்று அனைத்து வகை சுவையான உணவுகளும் இந்த இடுக்கமான வாசல் உணவகத்தில் உங்களுக்கு காத்திருக்கிறது. தைவானிய நகரமான தைனான் என்ற ஊரிலிருக்கும் இந்த உணவகம், பார்ப்பதற்கு சுவரைக் குடைந்து ஓட்டை ஏற்படுத்தியதுபோலவே இருக்கும். அதின் நுழைவாயில் வெறும் 40 செ.மீ அகலமே கொண்டது. ஒரு சராசரி உடல்வாகு கொண்ட நபர் சிரமப்பட்டு உள்ளே போகலாம். இருப்பினும், அந்த உணவகம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த இடுக்கமான வாசல் லூக்கா 13:22-30இல் குறிப்பிடப்பட்டதற்கு ஒத்திருக்குமா? சிலர் இயேசுவைப் பார்த்து, “இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” (வச.23) என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு, “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” (வச.24) என்று சவால் விடுகிறார். இரட்சிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நீங்கள் இடம்பெற்றிருக்கிறீர்களா? என்று இந்த ஒப்புமையை பயன்படுத்தி யூதர்களின் ஆணவத்தை இயேசு சுட்டிக்காட்டுகிறார். தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்றும், நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவர்கள் என்பதினால் தாங்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்போம் என்று யூதர்களில் பலர் எண்ணியிருந்தனர். ஆனால், “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு” (வச. 25) ஒன்றும் செய்ய இயலாது என்பதினால் அவர்களை முன்பாகவே செவிகொடுக்கும்படி எச்சரிக்கிறார். 

நம்முடைய குடும்ப பின்னணிய பெருமையும், நம்முடைய நற்கிரியைகளும் தேவனோடு நம்மை ஒப்புரவாக்காது. இயேசுவில் நாம் வைக்கும் விசுவாசம் மட்டுமே நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் தப்புவிக்கும் (எபேசியர் 2:8-9; தீத்து 3:5-7). வாசல் இடுக்கமானது, ஆனால் அநேகர் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு விசாலமாய் அமைந்திருக்கிறது. இந்த இடுக்கமான வாசல் வழியாய் அவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த அவர் இன்று நம்மை அழைக்கிறார்.

நன்றி, ஆனால் வேண்டாம்!

இந்தியாவில் மனநலம் குன்றிய பிள்ளைகளுக்காய் நடத்தப்படும் கிறிஸ்தவ பள்ளியொன்றிற்கு மாநகராட்சி வாரியத்திலிருந்து பெரும் நன்கொடை அளிக்கப்பட்டது. அதில் எந்த வில்லங்கமும் இல்லை என்று அறிந்த பின்னரே, அந்த தொகையை அவர்கள் பெற்றுக்கொண்டனர். ஆனால் பின்நாளில் மாநகராட்சி வாரியம், அந்த தொகைக்கான பிரதிநிதித்துவம் கோரியது. உடனே, அந்த பள்ளியின் இயக்குனர் அந்தத் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டார். பள்ளியின் கொள்கையை விட்டுக்கொடுக்க அவருக்கு மனதில்லை. “தேவனுடைய சேவையை, தேவனுடைய வழியில் செய்வது மிகவும் அவசியம்” என்று அவர் கூறுகிறார். 

நமக்கு வரும் உதவியை நிராகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் இதுவும் ஒன்று. வேதாகமத்தில் வேறொன்றைப் பார்க்க முடியும். சிறையிருப்பிலிருந்து, யூதர்கள் மீண்டு திரும்பியதும், அவர்களுடைய ஆலயத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு கோரேசு ராஜாஅனுமதியளித்தான் (எஸ்றா 3). “உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப் போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்” (4:2) என்று மற்றவர்கள் சொல்லும்போது இஸ்ரவேலின் தலைவர்கள் அதை நிராகரித்தனர். அவர்கள் ஒருவேளை அந்த உதவியை ஏற்றுக்கொண்டிருந்தால், ஆலயத்தை மீண்டும் கட்டும் முயற்சியில் தோல்வியடைந்திருப்பர். ஏனென்றால், அவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்பதினால், அவர்களின் விக்கிரக ஆராதனை உள்ளே புகுந்திருக்கக்கூடும். இஸ்ரவேலர்கள் சரியான தீர்மானத்தை எடுத்தனர். ஆகையால் எதிர்ப்பாளர்கள் ஆலயக்கட்டுமானப் பணியை தங்களால் முடிந்த அளவிற்கு தடை செய்தனர். 

பரிசுத்த ஆவியின் துணையோடும், விசுவாசிகளின் ஞானமான ஆலோசனையோடும் நாம் பகுத்தறிந்து செயல்பட பழகலாம். ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்கக்கூடிய சிநேகிதமான வாய்ப்புகளைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் தேவனுடைய பணியை தேவனுடைய வழியில் செய்யும்போது எந்த நன்மையும் குறைவுபடாது. 

நன்றாய் வாழ்தல்

வாழ்பவர்களுக்கான இலவச மரண ஊர்வலம். தென்கொரியாவில் இப்படி ஒரு சேவையை ஒரு அமைப்பு செய்துவருகிறது. 2012இல் அந்த அமைப்பு துவங்கியதிலிருந்து 25000க்கும் மேற்பட்ட இளைஞர் முதல் ஓய்வுபெற்றவர் வரையிலும் தங்கள் மரணத்தைப் பொருட்படுத்தினால் நலமாய் வாழமுடியும் என்று முன்வந்து அதில் ஈடுபட்டுள்ளனர். அதின் அலுவலர்கள் இதுபோன்ற உருவகப்படுத்தப்பட்ட மரண ஊர்வலங்கள் மக்களுக்குள் ஜீவியத்தின் மேன்மையையும், நன்றியுணர்ச்சியையும், பிரிந்திருக்கும் குடும்பங்களிடையே மன்னிப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது என்கின்றனர். 

இந்த வார்த்தைகள் பிரசங்கி புத்தகத்தின் ஆசிரியராகிய ஞானியின் வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது. “இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்;உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்” (பிரசங்கி 7:2). மரணம் என்பது வாழ்க்கையில் சொற்ப தன்மையையும் நாம் வாழப்போவது கொஞ்ச காலம் என்பதையும் அதிலே மற்றவர்களை நேசிப்பதின் அவசியத்தையும் நமக்கு வலியுறுத்துகிறது. அது பணம், உறவுகள், மகிழ்ச்சி போன்ற தேவன் கொடுக்கும் ஆசீர்வாதங்களிலிருந்து நம்முடைய பிடியைத் தளர்த்தி, நம்முடைய பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்துவைக்க ஊக்குவிக்கிறது. “அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” (மத்தேயு 6:20). 

மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நம் கதவை தட்டக்கூடும். அது நம் பெற்றோரைச் சந்திக்கும் நம் சந்திப்பை ஒத்திவைப்பதையோ, தேவனுக்கு ஊழியம் செய்யும் நம் திட்டங்களை தள்ளிவைப்பதையோ, அல்லது நம் பிள்ளைகளோடு நேரம் செலவழிக்கத் தவறுவதையோ மதியீனம் என்று வலியுறுத்துகிறது. கர்த்தரின் உதவியோடு நம் வாழ்க்கையை ஞானமாய் வாழப் பழகுவோம். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).

 

தேர்ந்தெடுப்பு அவசியம்

பாஸ்டர் டாமியனின் தினசரி அலுவல் அட்டவணையில், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளைத் தெரிந்தெடுத்து மரணத்தை நெருங்கும் இரண்டு நபர்களை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்த்து. ஓர் மருத்துவமனையில் தன் குடும்பத்தாரால் விரும்பப்படும் ஓர் பெண் இருந்தாள். அவளது தன்னலமற்ற பொதுச்சேவை பலரின் அபிமானத்தை பெற்றதால் மற்ற விசுவாசிகள் அவளது அறையை நிரப்பி, ஆராதனை, பாடல், ஜெபம் என்று செய்தனர். மற்றொரு மருத்துவமனையில், பாஸ்டர் டாமியனின் தேவாலயத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரின் உறவினரும் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரது கடினமான இதயம் கடினமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. மேலும் அவரது மோசமான முடிவுகள் மற்றும் தவறான செயல்களின் பின்னணியில் அவரது குடும்பம் வாழ்ந்துவந்தது. இந்த இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பிரதிபலித்தது. 

வாழ்க்கையில் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறியவர்கள் பெரும்பாலும் சங்கடமான, விரும்பத்தகாத, தனிமையான இடங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12, “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று கூறுகிறது. இளைஞர்கள் அல்லது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நலமுடையவர்கள், செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என யாராக இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கைப் பாதையை சரிசெய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அது தேவனை கனப்படுத்துமா? அது மற்றவர்களுக்கு உதவக்கூடியதா அல்லது பாதிக்கக்கூடியதா? இயேசுவை விசுவாசிப்பவருக்கு இது சிறந்த பாதையா?

தேர்ந்தெடுப்புகள் மிகவும் முக்கியம். பரலோகத்தின் தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று வாக்குப்பண்ணுகிறார்.