எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்வின் வில்லியம்ஸ்கட்டுரைகள்

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். "ஏன் இப்படி செய்தாய்?" என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், "எனக்கு பசித்தது" என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், "அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்" (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, "புசித்துக் குடித்து" மற்றும் "தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்" (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது ​​நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை "நன்மைகளால்" (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

அதிர்ஷ்டம்மல்ல, ஆனால் கிறிஸ்து

இப்பிரபஞ்சத்தில் சுமார் 700 குயிண்டிலியன் (7 மற்றும் 20 பூஜ்ஜியங்கள்) கிரகங்கள் உள்ளதாக டிஸ்கவர் என்ற இதழ் கூறுகிறது. ஆனால் பூமியைப் போன்ற கிரகம் வேறில்லை. வானியற்பியல் ஆராய்ச்சியாளர் எரிக் ஜாக்ரிசன், ஒரு கிரகத்தில் உயிரினம் வாழத் தேவையானது சரியான வெப்பநிலை மற்றும் நீா் வளம். அது "அதிர்ஷ்டவசமான" மண்டலத்தில் சுற்றிவரும் கிரகத்தில்தான் இவ்வாறு அமையும் எனக் கூறுகிறார். 700 குயின்டிலியன் கோள்களில், பூமியில் மட்டுமே உயிரிகள் வாழத் தகுதியாக உள்ளது எனத் தெரிகிறது. ஜாக்ரிசன் முடிவாகக் கூறும்போது, எப்படியோ பூமி்க்கு "மிகவும் அதிர்ஷ்டம்" அடித்துள்ளது என்கிறார்.

அதிர்ஷ்ட தேவதையால்  இந்தப் பிரபஞ்சம் தோன்றவில்லை, மாறாக இயேசுவின் கிரியையே காரணம் என்று பவுல் கொலோசெய சபைக்கு தீர்க்கமாக கூறியுள்ளார். அப்போஸ்தலன், கிறிஸ்துவை உலகின் சிருஷ்டிகராக முன்னிறுத்துகிறார்; "ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது" (கொலோ 1:16). இயேசு இந்த உலகத்தைப் படைத்த வல்லமையுள்ள சிருஷ்டிகர் மட்டுமல்ல, "எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது" (வ.17) என பவுல் சொல்கிறார். அதிக வெப்பமாயும், மிகவும் குளிராகவும் இல்லாமல், மனிதன் வாழ்வதற்கேற்ற ஒரு சீதோஷ்ண நிலையைக் கொண்டுள்ளது. தான் படைத்ததை, தமது பூரண ஞானத்தாலும் எல்லையில்லா வல்லமையாலும் இயேசு நிலைநிறுத்துகிறார்.

தேவனின் படைப்பின் அழகில் நாமும் பங்குடையவர்களாய் அதை அனுபவிக்கும்போது, அதிர்ஷ்ட தேவதையின் கிரியையே இது என்று எண்ணாமல், "சகல பரிபூரணமும் வாசமாயிருக்கும்" (வ.19) நோக்கமுள்ள, இறையாண்மையுள்ள, வல்லமையுள்ள அன்பானவரையே எண்ணுவோம்..

தாழ்த்தப்படுதல்

பெருமை கனவீனத்திற்கு வழிவகுக்கிறது என்பதை நார்வேயில் உள்ள ஒருவன் அறிந்துகொண்டான். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் உலக சாதனை படைத்த கார்ஸ்டன் வார்ஹோல்முவிடம், ஓடுவதற்கு ஏற்ற உடைகள் கூட அணியாத ஒருவன் தன்னுடன் போட்டிப்போடும்படி, திமிராகச் சவால் விடுத்தான். உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்துகொண்டிருந்த வார்ஹோம், சவாலை ஏற்று அவனைத் தோற்கடித்தார். எல்லைக்கோட்டில், தனக்குச் சரியான துவக்கம் கிடைக்கவில்லையென்றும், மீண்டும் பந்தயம் நடத்த வேண்டுமென்றும் அவன் கூறியபோது இரண்டு முறை உலக சாம்பியனான அவர் நகைத்தார்!

"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்" என நீதிமொழிகள் 29:23-ல் நாம் வாசிக்கிறோம். நீதிமொழிகளின் புத்தகத்தில் தேவன் அகந்தை உள்ளவர்களை நடத்தும் விதத்தைப் பற்றி எழுதுவது சாலொமோனுக்கு பிடித்த ஒன்றாகும் (11:2; 16:18; 18:12). இந்த வசனங்களில் அகந்தை அல்லது இறுமாப்பு என்ற வார்த்தைக்கு " புடைத்தல்" அல்லது "பொங்குதல்" என்று பொருள். அது தேவனுக்குரிய கனத்தை நாம் எடுத்துக்கொள்வதாகும். நாம் அகந்தைக்கொள்கையில்,  நம்மைப் பற்றி இருப்பதை விட உயர்வாக நாம் நினைக்கிறோம்.

இயேசு ஒருமுறை, "தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" (மத்தேயு 23:12) என்றார். அவரும், சாலொமோனும் தாழ்மையையும், பணிவையும் பின்பற்ற நம்மை நடத்துகிறார்கள். இது மாய்மாலமான தாழ்மை அல்ல, மாறாக, நம்மை சரிப்படுத்தி, நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை ஒப்புக்கொள்வதாகும்.  தன் வார்த்தைகளில் பதறாமல் (நீதிமொழிகள் 29:20) ஞானமாய் இருப்பதாகும்.

அவரைக் கனப்படுத்துவதற்கும் அவமானத்தைத் தவிர்ப்பதற்கும், நம்மைத் தாழ்த்திக்கொள்ளும் இதயத்தையும் ஞானத்தையும் நமக்குத் தரும்படி தேவனிடம் கேட்போம்.

இனி பாரபட்சம் இல்லை

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலி லேண்ட்ஸ்மேன் நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் ஓபரா ஆர்கெஸ்ட்ரா என்னும் இசைக்குழுவில் முக்கிய டிரம்பெட் வாசிப்பாளர் பாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டார். அவளை தேர்வுசெய்த நீதிபதி குழுவினரின் பாரபட்சங்களை தவிர்ப்பதற்காக, தேர்வானது, முகத்தை மறைத்து திரைமறைவில் நடைபெற்றது. லேண்ட்ஸ்மேன் தனது தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டு போட்டியில் வெற்றிபெற்றார். ஆனால் அவள் திரைக்குப் பின்னால் இருந்து வெளியேறியதும், சில ஆண் நீதிபதிகள் அறையின் பின்புறம் சென்று அவளைப் புறக்கணித்தனர். அவர்கள் வேறு யாரையோ தேடிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இஸ்ரவேலர்கள் ஒரு ராஜாவைக் கேட்டபோது, மக்களின் விண்ணப்பங்களுக்கு செவிகொடுத்து, மற்ற தேசங்களுக்கு இருப்பதுபோலவே ஒரு ராஜாவை ஏற்படுத்தினார் (1 சாமுவேல் 8:5; 9:2). ஆனால் சவுலின் ஆட்சி கீழ்படியாமையினாலும் உண்மையற்ற தன்மையினாலும் அடையாளப்படுத்தப்பட்டதால், ஒரு புதிய ராஜாவை அபிஷேகம் செய்ய தேவன் சாமுவேலை பெத்லகேமுக்கு அனுப்பினார் (16:1-13). சாமுவேல் மூத்த மகனான எலியாப்பைப் பார்த்தபோது,அவன் சரீரப்பிரகாரமாக திடகாத்திரமான இளைஞனாயிருந்ததினால் அவனை ராஜாவாக ஏற்படுத்த தீர்மானித்தார். ஆனால் தேவன் சாமுவேலின் தீர்மானத்தை விமர்சித்து, “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமுவேல் 16:7) என்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை வழிநடத்த தாவீதைத் தேர்ந்தெடுத்தார் (வச. 12).

மக்களின் திறன் மற்றும் அவரது நோக்கங்களுக்கான பொருத்தத்தை மதிப்பிடும்போது, தேவன் அவர்களது சுபாவங்கள், சித்தம் மற்றும் எண்ணங்களைப் பார்க்கிறார். உலகத்தையும் மக்களையும் அவர் பார்ப்பது போல் பார்க்க அவர் நம்மை அழைக்கிறார். தேவன் மக்களின் வெளிப்புற தோற்றங்களையும் அங்கீகாரங்களையும் பார்;க்கிறவரல்ல, அவர் இருதயத்தைப் பார்க்கிறவர்.

பிழைகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

1929 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தை வீழ்த்தியது போன்ற எதிர்கால நிதித் தவறுகளைத் தவிர்க்க உதவும் வகையில், ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் தவறுகளின் நூலகம் என்று ஒன்று (டுiடிசயசல ழக ஆளைவயமநள) நிறுவப்பட்டது. அடுத்த தலைமுறை பொருளாதார வல்லுனர்களுக்கு கல்வி கற்பதற்கு உதவும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களின் தொகுப்பை இது உள்ளடக்கியுள்ளது. நூலகத்தின் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, “புத்திசாலி மக்களும் முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள்” என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரே வழி, தங்களுடைய முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான் என்று அந்த கண்காணிப்பாளர்கள் நம்புகிறார்கள்.

சோதனையை மேற்கொள்வதற்கும், நிலையான ஆவிக்குரிய ஜீவியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், தேவ ஜனங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதே சிறந்த வழி என்று பவுல் கொரிந்தியர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவ்வாறு செய்வதின் மூலம் அவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தை மேன்மைப் பாராட்டாமல், இஸ்ரவேலர்களின் தோல்விகளிலிருந்து ஞானத்தைக் கற்றுக்கொள்ள அவர்களை மாதிரிகளாய் பயன்படுத்துகிறார். இஸ்ரவேலர்கள் விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு, விபச்சாரம் செய்து, தேவனுடைய சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் விரோதமாக முறுமுறுத்து, தேவன் ஏற்படுத்திய தலைமைத்துவத்திற்கு விரோதமாக கலகம்பண்ணினார்கள். அவர்களுடைய பாவத்தின் காரணமாக, அவர்கள் அவருடைய சிட்சையை அனுபவிக்க நேர்ந்தது (1 கொரிந்தியர் 10:7-10). இஸ்ரவேலின் தவறுகளை மீண்டும் செய்வதைத் கிறிஸ்தவர்கள் தவிர்க்கும்பொருட்டு, பவுல் இந்த வரலாற்று “உதாரணங்களை” வேதத்திலிருந்து முன்வைக்கிறார் (வச. 11).

தேவனுடைய உதவியோடு, அவருக்கு கீழ்படிதலை வெளிப்படுத்தும் பொருட்டு, நம்முடைய தவறுகளிலிருந்தும் மற்றவர்களுடைய தவறுகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம். 

ஜீவ கிரீடம்

பன்னிரண்டு வயதான லீஅடியானெஸ் ரோட்ரிகஸ்-எஸ்பாடா, 5-கே ஓட்டத்திற்கு (3 மைல்களுக்கு மேல்) தாமதமாகிவிடுமோ என்று கவலைப்பட்டார். அரை-மராத்தானில் பங்கேற்பாளர்களுடன் (13 மைல்களுக்கு மேல்!) அவள் தொடங்கும் நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே, ஓட்டப்பந்தய வீரர்களின் குழுவுடன் கிளம்பினாள். லீஅடியானெஸ் மற்ற ஓட்டப்பந்தய வீரர்களோடு ஓடுக்கொண்டிருக்கையில், அவர்களுக்கு சிறிது முன்னிலையில் இருந்தாள். நான்காவது மைலில், இறுதிக்கோடு அவளுடைய கண்களுக்கு தென்படாததால், அவள் நீண்ட மற்றும் கடினமான பந்தயத்தில் பங்கேற்றிருப்பதாக உணர்ந்தாள். அவள் ஆட்டத்தைக் கைவிடுவதற்குப் பதிலாக, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாள். இந்த திடீர் ஓட்டப்பந்தய வீராங்கணை தனது 13.1-மைல் பந்தயத்தை நிறைவு செய்து, ஆட்டத்தை நிறைவுசெய்த 2,111 பேர்களில் 1,885வது இடத்தைப் பிடித்தார். இதுவே விடாமுயற்சி!

ஆதித்திருச்சபை முதலாம் நூற்றாண்டில் உபத்திரவத்தை சந்தித்தபோது, பல கிறிஸ்தவர்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள தீர்மானித்தனர். ஆனால் அவர்களை தொடர்ந்து ஓடும்படிக்கு யாக்கோபு அவர்களை ஊக்கப்படுத்தினார். அவர்கள் சோதனையை பொறுமையோடே சகித்தால், தேவன் இரட்டிப்பான ஆசீர்வாதங்களை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்குப்பண்ணுகிறார் (யாக்கோபு 1:4,12). முதலாவதாக, “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (வச. 4). இரண்டாவது, இம்மையிலும் மறுமையிலும் வாழும் வாழ்க்கையில் தேவனுடைய மகிமையில் இருக்கும் வாய்ப்பான ஜீவக்கிரீடத்தை தருவேன் என்று வாக்குப்பண்ணுகிறார் (வச. 12).

கிறிஸ்தவ ஓட்டத்தின் இடையில், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஓட்டத்தின் கடினத்தை உணர்ந்து இது தங்களுக்கான ஓட்டமில்லை என்று ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள விழைகின்றனர். ஆனால் தேவன் நமக்குத் தேவையானதை கொடுப்பதால், நாம் விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டேயிருக்க முடியும்.

தேவனுடைய மீட்பு

ஒரு இரக்கமுள்ள தன்னார்வலர் அவரது துணிச்சலான செயலுக்காக “காக்கும் தூதன்” என்று அழைக்கப்பட்டார். ஜேக் மன்னா ஒரு வேலை தளத்தில் சோலார் பேனல்களை நிறுவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஐந்து வயது சிறுமியைக் காணாமல் எல்லோரும் தேடிக்கொண்டிருக்க, இவரும் அக்குழுவில் சேர்ந்துகொண்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்களது கேரேஜ்கள் மற்றும் முற்றங்களில் தேடியபோது, மன்னா அவளை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் தேடினார். அங்கு புதைமணலில் சிக்கியயிருந்த சிறுமியை அவர் கண்டுபிடித்து, அவளை அந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியே இழுத்து, அவளுடைய தாயிடத்தில் பத்திரமாய் ஒப்படைத்தார். 

அந்தச் சிறுமியைப் போலவே தாவீதும் மீட்கப்பட்டார். அவருடைய இருதயத்திலிருந்து எழும்பிய கதறலுக்கு தேவன் பதிலளிக்க, தாவீது “பொறுமையுடன்” (சங்கீதம் 40:1) காத்திருக்கிறார். தேவனும் பதிலளித்தார். தேவன் அவருடைய கூக்குரலுக்கு செவிகொடுத்து, “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து” (வச. 2) அவனை தூக்கியெடுத்து காப்பாற்றியதின் மூலம் பதிலளித்தார். தாவீதின் வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளத்தை அளித்தார். வாழ்க்கையின் சேற்றுச் சதுப்பு நிலத்திலிருந்து கடந்த கால மீட்புகள், துதி பாடல்களைப் பாடுவதற்கும், எதிர்காலச் சூழ்நிலைகளில் தேவனை நம்புவதற்கும், மற்றவர்களுடன் அவருடைய சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் அவனது ஆர்வத்தை வலுப்படுத்தியது (வச. 3-4).

பொருளாதாரச் சிக்கல்கள், திருமணக் குழப்பங்கள், பற்றாக்குறை போன்ற வாழ்க்கைச் சவால்களில் நாம் நம்மைக் காணும்போது, தேவனிடம் கூக்குரலிட்டு, அவருடைய கிரியைக்காய் பொறுமையுடன் காத்திருப்போம் (வச. 1). அவர் ஜீவிக்கிறார். ஆபத்துக் காலத்தில் எங்களுக்கு உதவவும், நிற்க உறுதியான இடத்தை வழங்கவும் தயாராக இருக்கிறார்.

தேவனிடம் சரணடைதல்

தங்களுக்கு தாங்களே உதவி செய்துகொள்கிறவர்களுக்கு தேவன் உதவுவதில்லை. அவரை நம்பி சார்ந்துகொள்வபவர்களுக்கே தேவன் உதவிசெய்கிறார். சுவிசேஷயத்தை மையமாயக் கொண்ட வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடரான “தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என்ற தொடரில் இயேசுவாக நடிக்கும் ஜோனத்தன் ரூமி, இதை 2018 ஆம் ஆண்டு மே மாதம் உணர்ந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் எட்டு வருடங்களாக வசித்த ரூமி, கிட்டத்தட்ட உடைந்துபோன நிலைமையில் இருந்தார். இருந்த உணவை உட்கொண்டு, வேறு வேலை ஏதும் கிடைக்காமல் தவித்தார். அவர் தன்னுடைய இருதயத்தை தேவனுடைய பாதத்தில் ஊற்றி, தனது ஜீவியத்தை தேவனிடத்தில் சரணடையச் செய்தார். “நான் சரணடைகிறேன், நான் சரணடைகிறேன்” என்ற வார்த்தைகளை சொல்லி ஜெபித்தார். அந்த நாளின் மாலையில், அவர் தபாலில் நான்கு காசோலைகளைப் பெற்றுக்கொண்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தில் இயேசுவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க தெரிந்தெடுக்கப்பட்டார். தன்னை விசுவாசிப்பவர்களுக்கு தேவன் உதவிசெய்வார் என்பதை ரூமி கண்டுபிடித்தார்.

“பொல்லாதவர்கள்" (சங்கீதம் 37:1) மீது பொறாமை கொள்வதற்கும் வருத்தப்படுவதற்கும் பதிலாக, எல்லாவற்றையும் தேவனிடம் ஒப்படைக்கும்படி சங்கீதக்காரன் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் அவரை மையமாக வைத்து, நன்மை செய்யவும் மனமகிழ்ச்சியாயிருப்பதற்கும் தேவன் நமக்கு கட்டளையிடுகிறார் (வச. 3-4). மேலும் நம்முடைய ஆசைகள், பிரச்சனைகள், கவலைகள் மற்றும் தினசரி அனைத்தையும் அவரிடம் சரணடையுங்கள். தேவன் நம்மை வழிநடத்தி நமக்கு சமாதானத்தை அருளுவார் (வச. 5-6). கிறிஸ்தவர்களாக, நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் அதிகாரம் அவருடையது. 

நாம் தேவனிடத்தில் சரணடைந்து அவரையே நம்புவோம். அவர் நம்முடைய வாழ்க்கையில் கிரியை நடப்பித்து, தேவயான மாற்றத்தை கொண்டுவருவார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).

 

தேர்ந்தெடுப்பு அவசியம்

பாஸ்டர் டாமியனின் தினசரி அலுவல் அட்டவணையில், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளைத் தெரிந்தெடுத்து மரணத்தை நெருங்கும் இரண்டு நபர்களை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்த்து. ஓர் மருத்துவமனையில் தன் குடும்பத்தாரால் விரும்பப்படும் ஓர் பெண் இருந்தாள். அவளது தன்னலமற்ற பொதுச்சேவை பலரின் அபிமானத்தை பெற்றதால் மற்ற விசுவாசிகள் அவளது அறையை நிரப்பி, ஆராதனை, பாடல், ஜெபம் என்று செய்தனர். மற்றொரு மருத்துவமனையில், பாஸ்டர் டாமியனின் தேவாலயத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரின் உறவினரும் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரது கடினமான இதயம் கடினமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. மேலும் அவரது மோசமான முடிவுகள் மற்றும் தவறான செயல்களின் பின்னணியில் அவரது குடும்பம் வாழ்ந்துவந்தது. இந்த இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பிரதிபலித்தது. 

வாழ்க்கையில் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறியவர்கள் பெரும்பாலும் சங்கடமான, விரும்பத்தகாத, தனிமையான இடங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12, “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று கூறுகிறது. இளைஞர்கள் அல்லது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நலமுடையவர்கள், செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என யாராக இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கைப் பாதையை சரிசெய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அது தேவனை கனப்படுத்துமா? அது மற்றவர்களுக்கு உதவக்கூடியதா அல்லது பாதிக்கக்கூடியதா? இயேசுவை விசுவாசிப்பவருக்கு இது சிறந்த பாதையா?

தேர்ந்தெடுப்புகள் மிகவும் முக்கியம். பரலோகத்தின் தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று வாக்குப்பண்ணுகிறார்.