எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவிட் ரோப்பர்கட்டுரைகள்

சிறப்பாய் செய்தாய்!

என்னுடைய நண்பர் விஜயனின் கால்பந்து பயிற்றுவிக்கிற பள்ளி, மாநில போட்டியில் கடும் போராட்டத்திற்கு பின் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. அவர்களின் போட்டி அணியினை கடந்த இரண்டு ஆண்டுகளாய் யாராலும் வெற்றிகொள்ள முடியவில்லை. நான் விஜயனை ஆறுதல்படுத்த ஒரு செய்தியை அனுப்பினேன். பதிலுக்கு அவர் “குழந்தைகள் மிகவும் போராடினார்கள்” என்று அனுப்பினார். 

எந்த பயிற்சியாளரும் போட்டிக்கு பின்பு விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்துவதில்லை. அவர்களுடைய தவறான தீர்மானத்திற்காகவும், அவர்கள் நழுவவிட்ட வாய்ப்பையும் சொல்லி அவர்களைத் திட்டுவதில்லை. அவர்களின் பலமான செய்கைகளைக் குறித்து அவர்களை பாராட்டவே செய்கின்றனர்.

அதேபோன்று கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அவரிடத்திலிருந்து கடினமான வார்த்தைகளை கேட்க விரும்புவதில்லை. கிறிஸ்து வரும் நாளில் நாம் அவருக்கு முன்பாக நிற்போம். அவர் நம்மை கனவீனப்படுத்துவதில்லை. அவரைப் பின்பற்றும்போது நாம் என்ன செய்தோம் என்பதையே அவர் பார்க்கிறார் (2 கொரி. 5:10; எபேசியர் 6:8). “நீ போராடினாய்! சிறப்பாய் செய்தாய்” என்று அவர் நம்மை பாராட்டுவார் என்று நம்புகிறேன். பவுல் அப்போஸ்தலர், “நல்ல போராட்டத்தைப் போராடினேன்” என்று கிறிஸ்துவினால் வரவேற்கப்படுவதற்கு காத்திருந்தார் (2 தீமோ. 4:7-8).

வாழ்க்கை என்பது நம்முடைய அழிவை எதிர்நோக்கும் கடுமையான எதிரியுடனான இடைவிடாத போராட்டம். இயேசுவைப்போல மாறுவதற்கும் மற்றவர்களை நேசிப்பதற்கும் நாம் ஏறெடுக்கும் எல்லா முயற்சியையும் அடைவதற்கு அவன் தடைசெய்வான். சில நல்ல வெற்றிகளையும், பல மனமுறியும் தோல்விகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு நித்திய ஆக்கினைத் தீர்ப்பில்லை (ரோமர் 8:1). தேவனுடைய குமாரனுடைய சார்பில் நாம் நிற்கும்போது, நாம் ஒவ்வொருவரும் தேவனால் புகழப்படுதலை அனுபவிக்கக்கூடும் (1 கொரி. 4:5).

தேவ சித்தம்

சிலவேளைகளில் தேவசித்தத்திற்கு கீழ்படிவது கடினம். அவர் நம்மை சரியான காரியத்தை செய்ய தூண்டுவார். அவர் நம்மை முறுமுறுப்பில்லாமல் பாடுகளை சகிக்கவும், கடினமான மக்களை நேசிக்கவும், “நீ அதை செய்யக்கூடாது” என்று நமக்குள்ளே ஒலிக்கும் அந்த சத்தத்திற்கு கீழ்ப்படியவும், நாம் எடுக்க விரும்பாத அடிகளை எடுத்து வைக்கவும் அழைத்திருக்கிறார். ஆகையால் ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய ஆத்துமாவைப் பார்த்து, “ஆத்துமாவே, கேள். அமைதியாயிரு: இயேசு என்ன செய்ய சொல்லுகிறாரோ, அதைச் செய்” என்று சொல்லவேண்டும்.  

“தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது” (சங்கீதம் 62:1). “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு” (62:5). இந்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றுபோல் தெரியும். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. தாவீது தன்னுடைய ஆத்துமாவைக் குறித்து சொல்லுகிறார்; பின்னர் தன் ஆத்துமாவிடம் சொல்லுகிறார். “அமர்ந்திருக்கிறது” என்பது மனஅமைதிக்கான தீர்மானம். “அமர்ந்திரு” என்பது அந்த தீர்மானத்தை நினைவுகூருவதற்கான தூண்டுதல்.

தாவீது, தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து, அமர்ந்திருப்பதை தெரிந்துகொண்டார். நாம் சிருஷ்டிக்கப்பட்டதற்கும் அழைக்கப்பட்டதற்குமான நோக்கமும் அதுவே. “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42) என்பதை ஒத்துக்கொண்டால் நாம் சமாதானமாய் வாழலாம். தேவனை தேவனென்று ஏற்றுக்கொள்வதும் நம்முடைய ஆழமான உணர்வுகளுக்கு அவரே ஆதாரம் என்பதை ஒத்துக்கொள்வதுமே நம்முடைய முதன்மையும் மேன்மையுமான அழைப்பு. “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” (சங்கீதம் 40:8) என்று சங்கீதக்காரன் பாடுகிறான். 

நாம் “நம்புகிறது அவராலே வரும்” என்பதினால், நாம் உதவிக்காய் அவரையே நாடுவது நல்லது (62:5). அவரிடத்தில் உதவி கோரினால், அவர் நம்மை மீட்டுக்கொள்வார். அவரால் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத எதையும் செய்யும்படிக்கு நம்மை தூண்டமாட்டார். 

கிறிஸ்துவின் நற்கந்தம்

ஒரு கிராம ஊழியரை எனக்குத் தெரியும். அவருடைய இரண்டு பேரன்களும் என்னுடைய சிறந்த நண்பர்கள். அவர் நகரத்திலுள்ள கடைக்குச் செல்லும்போது, அங்கு அவர் அறிமுகமானவர்களோடு அரட்டை அடிக்கும்போதும் நாங்கள் அவரைப் பின்தொடர்ந்துக்கொண்டிருப்போம். அவர்கள் எல்லாருடைய பெயர்களையும், அவர்களுடைய கதைகளையும் அவர் அறிந்திருந்தார். அவர் அங்கும் இங்கும் நின்று சுகவீனமாயிருக்கும் குழந்தையைப் பற்றியோ, பிரச்சனையான திருமணத்தைப் பற்றியோ கேட்டு ஒரு சில உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவார். அவர் வேதத்தைப் பகிர்ந்துக்கொண்டு தேவைப்பட்டால் அவர்களுக்காக ஜெபிப்பார். நான் அந்த மனுஷனை ஒருபோதும் மறக்கமாட்டேன். அவர் ஒரு சிறப்பானவர். அவர் ஒருபோதும் யாரிடத்திலும் தன்னுடைய விசுவாசத்தைத் திணிக்கமாட்டார். அதை அப்படியே விட்டுவிடுவார்.  

பவுல் குறிப்பிடும் “நற்கந்தம்” இந்த வயதான போதகரிடம் இருந்தது (2 கொரிந்தியர் 2:15). “கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை” (வச. 14) பரப்புவதற்கு தேவன் அவரைப் பயன்படுத்தினார். அவர் இப்போது தேவனிடம் சென்று விட்டார். ஆனால் அவருடைய நறுமணம் லொமேட்டா நகரம் முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது.

“சாதாரண மக்கள் யாரும் இல்லை. மனிதனோடு பேசுவது வெறுமையாய் போகாது என்று சி.எஸ்.லூயிஸ் எழுதியிருக்கிறார். இதை மற்றொரு வழியில் கூறும்போது, ஒவ்வொரு மனித தொடர்புக்கும் நித்திய பின்விளைவுகள் உண்டு. நம்முடைய விசுவாசம் மற்றும் மென்மையான வாழ்க்கையின், அமைதியான சாட்சியின் மூலம் அல்லது சோர்வுற்ற ஆத்துமாவுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை கூறுவதின் மூலமும், நம்மை சுற்றியிருக்கிற மக்களின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த ஒவ்வொரு நாளும் நமக்கு வாய்ப்புகள் உள்ளன. கிறிஸ்துவைப் போல வாழும் வாழ்க்கை மற்றவர்களிடத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். 

நம்பத்தகுந்த கிறிஸ்தவம்

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் குறிப்பிட்ட ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். அங்கிருந்து, ஒழுங்கு விதிமுறைகள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டது. அதில் மதுபானம், புகையிலை, சிலவகையான பொழுதுபோக்கு ஆகியவைகள் தடைசெய்யப்பட்டிருந்தது. “நம்முடைய ஊழியர்களிடமிருந்து இவற்றை எதிர்பார்க்கிறோம்” என்று அதில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அவைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை என்பதினால் அதை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கடினமாய் தெரியவில்லை. ஆனால் என்னுடைய விவாத பார்வையில் ஏன் அந்த தடைசெய்யப்பட்ட பட்டியலில் ஆனவம், உணர்வற்ற தன்மை, முரட்டுத்தனம், ஆவிக்குரிய மாறுபாடு, விமர்சனம் போன்ற காரியங்கள் தடைசெய்யப்படவில்லை என்று எண்ணத்தோன்றியது. 

இயேசுவை பின்பற்றுவதை விதிமுறைப் பட்டியலைக் கொண்டு தீர்மானிக்கமுடியாது. அது அளவிடமுடியாத வாழ்க்கையின் மிக நுட்பமான ஒரு குணாதிசயம். ஆனால் அது “அழகானது” என்று மட்டும் கூறமுடியும். 

மத்தேயு 5:3-10இல் பதிவாகியுள்ள மலைப் பிரசங்கம் அந்த அழகை விவரிக்கிறது. இயேசுவின் ஆவியை உடையவர்கள் தாழ்மையும் வலிமையும் கொண்டவர்கள். மற்றவர்களுடைய உபத்திரவத்தைப் பொருட்படுத்துவார்கள். சாந்தகுணம் மற்றும் இரக்கமுள்ளவர்கள். தங்களால் நன்மையான காரியம் செய்யவும் மற்றவர்களும் பிறருக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்கள், துன்பப்பட்டு தோற்றுப்போனவர்களின் மீது இரக்கம் காட்டுவார்கள். இயேசுவை நேசிப்பதையே பிரதானமாய் வைத்து செயல்படுவர். சமாதானமாயிருப்பார்கள், தன் சமாதானத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வர். தனக்கு தீமைசெய்கிறவர்களிடமும் தயவுகாட்டுவார்கள். அவர்கள் “பாக்கியவான்கள்,” அதாவது, மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று அர்த்தம். 

இந்த வகையான வாழ்க்கைமுறை மற்றவர்களுடைய கவனத்தை ஈர்த்து, அவர்களை இயேசுவை நாடி வரச்செய்கிறது.

உன் வாழ்க்கையின் தேடல்

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மாலை நேரத்தில் நானும் எனது மனைவியும், இரண்டு நண்பர்களைக் கூட்டிக்கொண்டு மலைப்பாதையின் வழியாய் நடந்துசென்றோம். அந்த குறுகலான மலைப்பாதையானது ஒருபுறத்தில் செங்குத்தான மலைச்சரிவினாலும், மறுபுறத்தில் ஆறுகளாலும் சூழப்பட்டிருந்தது.

ஒரு திருப்பத்தில், பெரிய கரடி ஒன்றைப் பார்த்தோம். அது இங்கும் அங்குமாய் தன் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது. அந்த கரடி எங்களை கவனிக்கவில்லை. ஆனால் அது சீக்கிரம் கவனிக்க நேரிடும்.

எங்கள் நண்பர்களில் ஒருத்தி, தன் கேமராவை எடுத்து, “ஓ! நான் அதை படம் பிடித்தாக வேண்டும்” என்று சொன்னாள். அந்த சூழ்நிலை சாதகமானது இல்லை என்று உணர்ந்த நான், “இல்லை, நாம் இங்கிருந்து புறப்பட்டாக வேண்டும்” என்று கூறினேன். அந்த கரடி எங்கள் பார்வையிலிருந்து முற்றிலும் மறையும்வரை மெல்ல நகர்ந்து, ஓட்டம்பிடிக்க ஆரம்பித்தோம்.

பணக்காரனாக விரும்பும் ஆசைக்கு முன்பதாகவும் அப்படித்தான் ஓடவேண்டும். பணம் வைத்திருப்பது தவறல்ல அது கொடுக்கல் வாங்கலுக்கு நமக்கு அவசியப்படுகிறது. ஆனால் பண ஆசை கொண்டவர்கள், “சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் என்று பவுல் எச்சரிக்கிறார். பண ஆசை பலவிதமான பாவங்களுக்கு வழிவகுக்கிறது (1 தீமோ. 6:9).

அதற்கு பதிலாக, “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும்” அடையும்படிக்கு நாம் பிரயாசப்படவேண்டும் (வச. 11). இந்த நற்குணங்களை விரும்பி, அதை தேவனிடத்தில் கேட்கும்போது அவைகள் நம்மில் கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. நாம் தேவனிடத்தில் சுதந்தரிக்கவிரும்பும் மன திருப்தியை இந்த வழியில்தான் அடையமுடியும்.

எடுக்கப்பட்டது

என்னுடைய வயதான நாய் ஒன்று என் பக்கத்தில் அமர்ந்து வெட்டவெளியில் வெறித்துப் பார்க்கிறது. அதின் எண்ணங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்காது. ஆனால் அவைகளால் மரணத்தை விளங்கிக்கொள்ள முடியாது என்பதினால் அது மரணத்தைக் குறித்து யோசிக்கவில்லை என்பது உறுதி. எதிர்கால விஷயங்களைப் பற்றி அவைகள் சிந்திப்பதில்லை. ஆனால் நாம் சிந்திக்கிறோம். நம் வயது அல்லது உடல்நிலை அல்லது செல்வம் எதுவாக இருந்தாலும், நாம் ஒரு கட்டத்தில் இறப்பதைப் பற்றி சிந்திக்கிறோம். சங்கீதம் 49:20-ன் படி, மிருகங்களைப் போலல்லாமல், நமக்கு “புரிதல்” இருக்கிறது. நாம் இறந்துவிடுவோம் என்று நமக்குத் தெரியும், அதை மாற்ற நாம் எதுவும் செய்யமுடியாது. “எவ்விதத்தினாலாவது ஒருவரை மீட்டுக்கொள்ளவும் அல்லது அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்கு கொடுக்கவுங்கூடாதே" (வச.8). தன்னை கல்லறையிலிருந்து மீட்டெடுப்பதற்கு போதுமான பணம் யாரிடமும் இல்லை.

ஆனால் மரணத்தின் முடிவில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது: “ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்” என்று சங்கீதக்காரன் வலியுறுத்துகிறார். “அவர் என்னை ஏற்றுக்கொள்வார்” (வச. 15 அதாவது, “அவர் என்னை உள்ளே அழைத்துச் செல்வார்”) என்றும் கூறுகிறார். “நாம் போகும்போது நம்முடைய உள்ளே அழைத்துக்கொள்வதற்குதான் வீடு என்று பெயர்” என்று ராபர்ட் ஃப்ரோஸ்ட் கூறுகிறார். 

தேவன் தம்முடைய குமாரன் மூலமாக மரணத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார், அவர் “எல்லாரையும் மீட்கும்பொருளாக தன்னை ஒப்புக்கொடுத்தார்” (1 தீமோத்தேயு 2:6). இவ்வாறு நம்முடைய காலம் வரும்போது, அவர் நம்மை வாழ்த்தி வரவேற்று, நம்மை உள்ளே அழைத்துச் செல்வார் என்று இயேசு வாக்குறுதி அளித்துள்ளார் (யோவான் 14:3).

என்னுடைய காலம் வரும்போது, என் வாழ்க்கையின் விலைக்கிரயத்தை தேவனுக்குக் கொடுத்த இயேசு என்னைத் திறந்த கரங்களுடன் தம்முடைய பிதாவின் வீட்டிற்கு வரவேற்பார்.

உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும்

பல வருடங்களுக்கு முன் நானும் என் மகன் ஜோஷும் ஒரு மலைப்பாதையில் மேலே ஏறினபோது, ஒரு புழுதிபுயல் காற்றில் மேலே வருவதை கண்டோம். நாங்கள் முன்னேறி சென்றுகொண்டிருந்தபோது ஒரு மிருகம் தூசியின் மத்தியில் ஒரு பதுங்கு குழியை தோண்டிகொண்டிருந்தது. அதனுடைய தலை மற்றும் தோள்பட்டை அந்த குழியினுள் இருந்தது. தன்னுடைய முன்னங்கால்களை கொண்டு தீவிரமாக குழிதோண்டி தன்னுடைய பின்னங்கால்களை கொண்டு குழியிலிருந்து மண்ணை வெளியே தள்ளியது. தன்னுடைய வேலையில் மும்முரமாக இருந்ததால் அது எங்களை கவனிக்கவில்லை.

நான் என்னை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த ஒரு நீண்ட குச்சியை கொண்டு அதன் பின்னிருந்து அதனை குத்தினேன். நான் அதை காயப்படுத்தவில்லை, ஆனால் அது எகிறி மேலே குதித்து எங்களுக்கு நேராக திரும்பியது. நூறு அடி ஓட்டத்தில் ஜோஷும் நானும் ஒரு புதிய உலக சாதனை படைத்தோம்.

நான் என்னுடைய துடுக்குத்தனத்திலிருந்து சிலவற்றை கற்றுக்கொண்டேன்: சிலநேரம் மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடாமல் இருப்பதே சிறந்தது, விசேஷமாக இயேசுவுக்குள் சகவிசுவாசிகளாக உள்ளவர்களிடம் உள்ள உறவில். அப்போஸ்தலர் பவுல் தெசலோனிக்கேயரை “நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும் உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்” (1 தெசலோனிக்கேயர் 4:12) உற்சாகப்படுத்துகிறார். நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் மற்றும் தேவனுடைய கிருபையை கொண்டு வேதவாக்கியங்களை பகிர முயற்சிக்க வேண்டும். மற்றும்சில நேரங்களில் சீர்படுத்தும் கனிவான வார்த்தைகளை வழங்கக்கூட  அழைக்கப்பட்டிருப்போம். ஆனால் மற்றவருடைய வாழ்க்கையில் தலையிடாமல் அமைதியாக வாழக் கற்றுக்கொள்வது அவசியம். தேவனுடைய குடும்பத்திற்கு வெளியே உள்ள மற்றவர்களுக்கு அது ஒரு உதாரணமாக இருக்கும் (வ 12). “ஒருவரில் ஒருவர் அன்பு கூர்வதே” (வ 9)  நம்முடைய அழைப்பு.

ஓஸ்-ன் அவ்வளவு அற்புதமான மாந்திரிகன் அல்ல

ஒரு ஆங்கில புத்தகத்தை தழுவி எழுதப்பட்ட ஓஸ்-ன் மாந்திரிகன் என்ற  நாடகத்தில் டோரதி, சோலைக்கொள்ளை பொம்மை,  தகர மனிதன், கோழையான சிங்கமும் மேற்கின் பொல்லாத சூனியக்காரிக்கு சக்தியளித்த விளக்குமாற்றை கொண்டுவருகிறார்கள். அதற்கு பதிலாக ஓஸ்-ன் மாந்திரிகன் அவர்கள் நால்வருக்கும்  அவர்களது ஆழ் மனதின் ஆசைகளை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்து இருந்தான்: டோரதி மீண்டும் வீடு செல்வதற்கு ஒரு சவாரி, சோலைக்கொள்ளை பொம்மைக்கு  மூளையும், தகர மனிதனுக்கு இதயமும்,  கோழையான சிங்கத்திற்கு  தைரியமும். ஆனால் அந்த மாந்திரீகனோ அவர்களை தினமும் ஏமாற்றி அடுத்த நாள் வர கூறுவான்.

அவர்கள் அந்த மாந்திரீகனுடன் கெஞ்சிக் கொண்டிருக்கும் போது, டோரோதியின் நாய்  டோடோ அங்கிருந்த திரையை இழுத்துவிட, திரைக்கு  பின்னால் இருந்து பேசிக்கொண்டிருக்கும் மாந்திரீகன் ஒரு மாந்தரீகனே  அல்ல, நெப்ராஸ்க்கா என்ற ஊரில்  இருந்து வந்த ஒரு பயந்த அமைதியற்ற மனிதன் என்று தெரிய வருகிறது. 

இதன்  நூலாசிரியர் ல. பிராங்க் பாம்-க்கு, கடவுளை பற்றி பிரச்சினை இருந்ததால்  நம் பிரச்சனைகளை நாம் தான்  தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை  மக்களுக்கு தெரிவிக்க விரும்பினார்.

இதற்கு மாறாக, அப்போஸ்தலனாகிய யோவான் திரையை பின்னிழுத்து திரைக்குப் பின்னால் இருக்கும் அற்புதமானவரை வெளிப்படுத்துகிறார். வார்த்தைகள் உதவவில்லை என்றாலும் யோவான் கூறுவது தெளிவாக உள்ளது : தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், அதை சுற்றி பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருக்கிறது ( வெளிப்படுத்தின விசேஷம் 4:2,6). எப்பேர்ப்பட்ட தொல்லைகள் நம்மை பூமியில் வாதித்தாலும் (அதி 2-3), தன் நகங்களை கடித்து கொண்டு முன்னும் பின்னுமாக  தேவன் நடப்பதில்லை. அவருடைய  சமாதானத்தை நாம் அனுபவிப்பதற்கு, நம்  நன்மைக்காக  அவர் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

முடிவுகளை தேவனிடம் விட்டு விடுங்கள்

சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கல்லூரியின் கால்பந்து வீரர்களுக்கு இயேசுவைபற்றி பிரசங்கிக்கும்படியாக அழைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் பொதுவாக கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளவர்கள் என்று அனைவரும் அறிவார்கள்.  அதின் நிமித்தமாக கூட எனது நண்பரையும் அழைத்து சென்றேன். நான் அங்கு அழைக்கப்பட்ட நாளிலே அவர்கள் தங்கள் கோப்பையை வென்ற நாளாக இருந்தது. அதினால் நாங்கள் கூடியிருந்த அறை முழுவதும் ஆரவாரமும் கொண்டாட்டமும் நிறைந்திருந்தது. இதன் நடுவில் மாணவ தலைவன் எழுந்து " கடவுளைக்குறித்து இருவர் உங்களிடம் பகிரும்படி வந்திருக்கிறார்கள்" என்று அறிமுகப்படுத்தினார்.

நடுக்கத்துடன் எழுந்துபோய் தேவ அன்பை குறித்து பகிர துடங்கினேன். மெய்மறந்த ஆர்வத்துடன் அனைவரும் கவனித்தார்கள். முடிவில் சில வெளிப்படையான நேரடி கேள்விகள் என்னிடம் கேட்டார்கள்.நாளடைவில் அங்கு வேதபாடம் நடத்தும்படி தேவன் எங்களை வழிநடத்தினார். அதினிமாதமாக பலர் அங்கு இரட்சிக்கப்பட்டார்கள்.

இதைக்குறித்து நினைக்கும்போது "சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்" (லூக். 10:18) என்கிற வசனம் நினைவுக்கு வந்தது. சமயங்களில் நான் முகம் குப்புற விழுந்து தேவனை அவ்வாறு பணிந்து கொண்டேன்.

லூக்கா 10-ஆம் அதிகாரத்தில், சீஷர்கள் தங்கள் ஊழிய பனியின் சாதனைகளை குறித்து இயேசுவிடம் வந்து அறிக்கையிட்டார்கள். அவர்கள் முழுமையாக பல ஆத்துமாக்கள் ராஜ்யத்தின் ரகசியத்தை  அறிந்தார்கள், பல அசுத்த ஆவிகள் துரத்தப்பட்டது, நோய்கள் குணமாக்கப்பட்டது. ஆனால் இவைகளை இயேசுவிடம் அவர்கள் சொல்லும்போது இதற்கு மாறாக பதிலளித்தார் "ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்" (வச. 20).

நாமும் சமயத்தில் வெற்றியினால் சந்தோஷப்பட்டு தோல்வியினால் மனங்கசந்து போகிறோம். தேவன் நமக்கென்று நியமித்த பணியை தொடர்ந்து செய்து அதன் முடிவை அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். உங்கள் பெயர் அவர் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.