“சிறந்ததே நடக்கும் என நம்பு, ஆனால் மிக மோசமான விளைவிற்கு தயாராகவுமிரு,” என எனக்கு பரிச்சயமான நிதி ஆலோசகர் ஒருவர் பணத்தை முதலீடு செய்வதிலுள்ள உண்மையான நிலையை விளக்கினார். நம் வாழ்வில் நாம் தீர்மானிக்கும் அநேக தீர்மானங்களின் விளைவுகளும் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் பாதை அப்படியல்ல. ஏனெனில் நாம் தெரிந்துகொண்ட இப்பாதையில் பயணிக்கும்பொழுது, என்ன நேர்ந்தாலும் இறுதியில் அது ஒரு வீண் பிரயாசமாய் இருக்கவில்லை என்பதை நாம் அறிந்துகொள்வோம்.

ஒழுக்கக் கேட்டிற்கு பெயர்பெற்ற கொரிந்து பட்டணத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் அங்குள்ள கிறிஸ்தவர்களோடு ஒரு வருடம் தங்கியிருந்தார். அவர் அங்கிருந்து சென்ற பின், கிறிஸ்துவுக்கென்று சாட்சியாக ஜீவிப்பதில் எப்பயனுமில்லை என்று தவறாக நினைத்து சோர்ந்து போய்விடாதிருக்கும்படி, கடிதத்தின் மூலம் அவர்களை உற்சாகப் படுத்தினார். மேலும் ஒரு நாள் தேவன் திரும்பவும் வந்து, மரணத்தை விழுங்கி ஜெயமெடுப்பார் என உறுதியளித்தார் (1 கொரி. 15:52-55).

இயேசுவுக்காக உண்மையாக ஜீவிப்பது கடினமானதாகவும், சோர்வளிப்பதாயும், சில சமயம் அபாயகரமானதாகவும் இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும், பிரயோஜனமற்றதோ அல்லது வீணானதோ அல்ல. நாம் தேவனோடு நடந்து, அவருடைய பிரசன்னத்திற்கும், வல்லமைக்கும் சாட்சியாய் இருக்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கை விருதாவாயிராது! இது நிச்சயமே.