சமீபகாலத்தில் நான் மேற்கொண்ட விமானப் பயணத்தில் விமானம் தரை இறங்குவது சற்று கடினமாக இருந்ததினால், விமானம் ஓடுதளத்தில் ஓடினபொழுது, விமானத்திற்குள்ளிருந்த நாங்கள் அங்கும் இங்குமாக அலைக்கப்பட்டோம். சில பயணிகள் மிகவும் பயத்துடன் இருந்தார்கள். ஆனால் எனக்குப்பின் அமர்ந்திருந்த சிறுமிகள் “ஆம், நாம் மறுபடியும் முன்புபோல வலது இடதுபுறமாக அசைவோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினபொழுது அந்த பயம் நிறைந்த சூழ்நிலை மாறிவிட்டது.

பொதுவாக குழந்தைகள் வாழ்க்கையில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான செயல்களை ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடனும், எளிய திறந்த மனதுடனும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். “சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” (மாற். 10:15) என்று இயேசு கூறினபொழுது, குழந்தைகளின் இத்தன்மையை மனதில் வைத்துதான் ஒருவேளை அவர் அப்படி கூறியிருக்கலாம்.

வாழ்க்கையில் சவால்களும், இருதயத்தை நொறுக்கக்கூடிய நிகழ்ச்சிகளும் ஏற்படலாம். “அழும் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படும் எரேமியா இதைக்குறித்து, நாம் அறிந்ததை விட அதிகமாக அறிந்திருந்தான். ஆனால் எரேமியாவின் கஷ்டங்கள் மத்தியில் “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது”(புலம். 3:22–23) என்ற ஓர் ஆச்சரியமான உண்மையை அவனிடம் கூறி தேவன் அவனை ஊக்குவித்தார்.

நம்முடைய வாழ்க்கையில், தேவனுடைய புதிய கிருபைகள் எந்த நேரத்திலும் அருளப்படலாம். அவருடைய கிருபை எப்பொழுதுமே உள்ளது. ஆனால், தேவன் ஒருவரால் மட்டுமே செய்யப்படக்கூடிய காரியங்களுக்காக, சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்புடன், விழிப்புடன் காத்திருக்கும்பொழுது மட்டுமே அவரது கிருபைகளை நம்மால் பார்க்க இயலும். நமது உடனடியான சூழ்நிலைகளை வைத்து தேவனுடைய நன்மைத் தன்மையை விளக்க இயலாது என்றும், வாழ்க்கையின் மிகக்கடினமான பகுதிகளை விட அவருடைய உண்மை பெரிதென்றும் எரேமியா அறிந்திருந்தான். இன்று, தேவனுடைய புதிய கிருபைகளைத் தேடி கண்டுபிடியுங்கள்.