நுகர்வோர் பயன்படுத்தும் உற்பத்திப் பொருட்களில் கீழ்க்கண்ட எச்சரிப்புகள் காணப்படுகின்றன:

“மடக்குமுன் குழந்தையை தூக்கிவிடுங்கள்.” (குழந்தைகளின் தள்ளுவண்டி)

“ஆக்ஸிஜன் கொடுக்காது.” (தூசிக்காக நாசியில் அணியும் முகமூடி)

“வாகனம் ஓட்டும்பொழுது உங்களது கைபேசியை ஒருக்காலும் உபயோகப்படுத்தாதீர்கள்.” (கையினால் பயன்படுத்தத் தேவையற்றதும் வாகனம் ஓட்டிக்கொண்டு பேசக்கூடிய Drive ‘n’ Talk செல்போன்)

“பயன்படுத்தும்பொழுது இப்பொருள் நகரும்.” (ஸ்கூட்டர்)

“ஒரு முட்டாளிடமிருந்து முட்டாள்தனத்தை எதிர்பாருங்கள்” என்ற முதுமொழி நாபால் அணிந்திருந்தால், அது அவனைக்குறித்த சரியான எச்சரிப்பைக் கொடுக்கும் குறிப்புச் சீட்டாக இருந்திருக்கும் (1 சாமுவேல் 25ஐப் பார்க்க). அவன் தாவீதிடம் பேசினபொழுது காரணமற்ற கோபத்துடன் பேசினான். சவுலிடமிருந்து தாவீது தப்பி ஓடினபொழுது, நாபால் என்ற ஐசுவரியவானின் ஆட்டு மந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தான். நாபால் அவனது ஆடுகளுக்கு மயிர் கத்தரித்து விருந்து வைக்கிறான், என்று தாவீது கேள்விப்பட்ட பொழுது, அவனது ஆட்களில் 10 பேரை நாபாலிடம் அனுப்பி அவனும் அவனுடைய ஆட்களும், நாபாலினுடைய ஆட்டுமந்தைகளை வனாந்திரத்தில் பாதுகாத்து கொண்டதிற்குப் பதிலாக, அவனுக்கும் அவனது ஆட்களுக்கும் உணவு தந்து உதவுமாறு மரியாதையுடன் கேட்டு அனுப்பினான் (வச. 4-8).

தாவீதின் விண்ணப்பத்திற்கு, நாபால் மிகவும் கோபத்துடன் மறுமொழி கொடுத்தான். “தாவீது என்பவன் யார்?… நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்கு கொடுப்பேனோ?” (வச. 10, 11) என்றான். அன்றைய நாட்களில் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும்பொழுது, மற்றவர்களை விருந்திற்கு அழைக்க வேண்டும் என்ற பழக்கத்தின்படி அவன் தாவீதை அழைத்து உபசரிக்கவில்லை. மேலும் தாவீதை மரியாதை இல்லாமல் பேசி, இழிவு படுத்தினான். முக்கியமாக தாவீது அவனது ஆட்டு மந்தைகளைக் காத்துக்கொண்ட பணிக்கான கூலியைக் கூட நாபால் அவனுக்குத் தரவில்லை.

உண்மையாகக் கூறப்போனால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் சிறிய அளவில் நாபாலின் குணம் இருக்கிறது. சில நேரங்களில் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறோம். இதற்கான ஒரே மருந்து, நாம் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிடுவதே ஆகும். அவர் நம்மை மன்னிக்க முன்வந்து, நமக்கு ஞானம் தந்து போதித்து வழிநடத்துவார்.