டிஸ்னி லேண்டில் புகழ்பெற்ற ஒரு காட்சியைக் காண்பதற்காக நான் வரிசையில் நின்று கொண்டிருந்தபொழுது, வரிசையில் நின்ற அநேக மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் நிற்பதைக் குறித்து குறைசொல்லி கொள்ளாமல் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்ததைக் கவனித்தேன். அப்படி வரிசையில் நின்றபொழுது அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகக்கூடிய காரணம் என்னவாக இருக்குமென்பதைக் குறித்து ஆழமாக சிந்தித்தேன். அங்கு நின்றவர்களில் ஒரு சிலர்தான் தனிநபர்களாக வந்திருந்தார்கள். சிநேகிதர்கள், குடும்பங்கள், குழுக்கள், தம்பதியராக வந்திருந்தவர்கள், வரிசையில் நிற்பதைப்பற்றி பேசுவதைவிட வேறுபல அனுபவங்களைக் குறித்து ஒருவரோடொருவர் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

கிறிஸ்தவ வாழ்க்கையும் தனிமையாக வாழ்வதற்கல்லாமல் பிறரோடு சேர்ந்து வாழ்வதற்கே அமைக்கப்பட்டுள்ளது. எபிரெயர் 10:19–25 வசனங்கள் மற்ற விசுவாசிகளோடு இணைந்து ஒரே சமுதாயமாக வாழவேண்டுமென்று அறிவுறுத்துகிறது. “உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” (வச. 22–25), ஒருவரோடொருவர் ஐக்கியமாக இருக்கும்பொழுது, ஒருவருக்கொருவர் நம்பிக்கை ஊட்டிக்கொண்டு “ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கலாம்” (வச.25).

நமது வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான நாட்கள்கூட, பிறர் அவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்ளும்பொழுது, நமது விசுவாச பயணத்தில் அவை அர்த்தமுள்ள நாட்களாகின்றன. வாழ்க்கையை தனிமையாக சந்திக்காதீர்கள். நாம் இணைந்து பயணப்படுவோம்.