200 ஆண்டுகளுக்கு முன் நெப்போலியன் ரஷ்யப் போரில் தோற்றுப்போனதற்கு ரஷ்யக் கடுங்குளிரே காரணம் என்று கருதப்படுகிறது. ஆனால் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்னவெனில் போர் குதிரைகள் அனைத்தும் கோடை காலத்திற்கான லாடங்ளை அணிந்திருந்தது தான் காரணம். குளிர் காலம் வந்தபொழுது, போர் வீரர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஏற்றியுள்ள பாரமான வண்டிகளை பனி அடர்ந்த சாலைகளில் இழுத்துச்செல்லும்பொழுது, வழுக்கி விழுந்து குதிரைகள் மாண்டு போயின. இவ்வாறு தொடர்ந்து நெப்போலியனால் உணவு போன்ற அத்தியாவசியமான பொருட்களை 400,000 போர் வீரர்களைக்கொண்ட தன் வலிமைமிக்க படைக்கு வழங்க முடியாத நிலையில் போர் வீரர்களும் மடிந்துபோய் 10,000 பேரை உடைய வலுவற்ற படையாக மாறியது. ஓர் சிறிய தவறு பேரழிவிற்கு வித்திட்டது!.

நாவினால் ஓர் சிறிய வார்த்தையைத் தவறாகப் பேசிவிட்டால் அது பேராபத்தை விளைவிக்கும் என்று யாக்கோபு விளக்குகிறார். ஒரு தவறான வார்த்ததை அவர்கள் தொழிலையோ அல்லது மக்களின் வாழ்க்கைப் பாதையையோ மாற்ற வல்லது. நாவு விஷம் நிறைந்தது என்று யாக்கோபு கூறுகிறார். “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது” என்று யாக்கோபு 3:8ல் வாசிக்கிறோம். இன்றைய உலகில் பிரச்சனைகள் மிகவும் அதிகரித்துவிட்டன. கவனக்குறைவான ஓர் மின் அஞ்சல், சமூக ஊடகங்களில் பதிவாகும் தவறான செய்திகள் பல தீமைகளை விளைவிக்கும். மீண்டும் திசை திருப்ப முடியாத அளவிற்கு வெகுவேகமாய் வைரஸ் தொற்று நோய் போல் பரவிவிடும்.

தாவீது அரசன், தேவனைக் கனப்படுத்தும்பொழுது நாம் எவ்விதம் வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். “கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்… உன் நாவை பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்” (சங். 34:11,13).“என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து… என் வாயைப் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன்” என்று தாவீது தீர்மானிக்கிறார் (சங். 39:1). தேவனே, இதைப்போன்று நாங்களும் நடக்க உதவி செய்யும்.