அலாரம் கடிகாரம் ஒலித்து நின்றது. இது மிகவும் சீக்கிரமாகத் தோன்றியது. முழுமையான ஓர் நாள் இன்னும் உங்களுக்கு முன் இருக்கிறது. வேலை செய்ய வேண்டும், நிர்ணயம் செய்யப்பட்ட காரியங்களை அதன் பிரகாரம் செய்து முடிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய மக்களை கவனிக்க வேண்டும். இதே போன்று அநேக காரியங்கள். ஆம் நீங்கள் தனிமையில் இல்லை. நம்மில் அநேகருக்கு எதைச்செய்ய வேண்டும் என்று தெரியாது, ஓர் காரியத்திலிருந்து மற்றோர் காரியத்தைச் செய்ய அங்கும் இங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருப்போம். அதனால்தான் நாம் ஓட்டப்பந்தயம் ஓடும் மனிதர் என்று அழைக்கப்படுகிறோம் என்று வேடிக்கையாக ஒருவர் கூறியிருக்கிறார்.

அப்போஸ்தலர்கள் தங்கள் முதல் மிஷனரி பயணத்தை முடித்து திரும்பி வந்தபொழுது அவர்கள் சொல்ல வேண்டிய காரியங்கள் அநேகம் இருந்தன. ஆனால் மாற்கு தன் நூலில் இயேசு அவர்கள் கூறியவற்றை எவ்வாறு மதிப்பீடு செய்தார் என்றெல்லாம் எழுதாமல், சீடர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்பதையே முக்கியமாகக் கருதினார். “இயேசு அவர்களை நோக்கி, வனாந்திரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்” (மாற். 6:31).

தேவனுடைய பிரசன்னத்தை நாம் உணர்ந்தவர்களாய் அவரையே சார்ந்திருக்கும்பொழுது மாத்திரம் தான் முற்றிலுமாக உண்மையான இளைப்பாறுதல் நமக்குக் கிடைக்கும். நாம் நமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும்பொழுது, நமது பணிகளின் பிடியிலிருந்தும், தொழிலிருந்தும், குடும்ப மற்றும் ஊழியப் பொறுப்புக்களிலிருந்தும் சற்று நம் கரங்களைத் தளர்த்தி, விசுவாசத்துடன் தேவனிடம் ஒப்படைத்து விட்டு சற்று இளைப்பாறலாம். நம் எண்ணச் சிதறல்களை கிறிஸ்துவுக்குள் சிறைப்படுத்திக் கொண்டு, அமைதியற்ற நிலையில் உள்ள மன அழுத்தங்களைப் புறம்பே தள்ளிவிட்டு, தேவனுடைய அன்பின் உண்மைத்தன்மையினால் ஏற்படும் அதிசயமான காரியங்களை எண்ணி நன்றியுள்ள உள்ளத்தோடு மகிழ்ச்சியை பிரதிபலிக்கலாம்.

விடுதலையான எண்ணத்துடன் அமைதியை நாடுங்கள். உண்மையான இளைப்பாறுதலைப் பெற்று அனுபவியுங்கள்.