உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் நிலையங்களில் எடை குறைக்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் விரும்புகிறவர்களுக்கு, பல்வேறு செயல்முறைத் திட்டங்களை அறிவிக்கின்றனர். ஓரு உடல் தகுதிக்கான மையத்தில் குறைந்தது 50 பவுண்ட் எடை குறைத்து ஆரோக்கியமாக வாழ விரும்புகிறவர்களையே சேர்த்துக் கொள்கிறது. ஒரு பெண், அவள் சென்ற உடல் தகுதி நிலையத்திற்கு, அவளோடு கூட வந்த எடை குறைவான, நல்ல உடல்வாகுடைய பெண்கள் அவளைப் பார்த்து வடிவற்ற உடல் அமைப்பு உடையவள் என்று அவளைப் பார்த்து கேலி செய்ததினால், அந்த நிலையத்திற்குச் செல்வதை நிறுத்திவிட்டதாகக் கூறினாள். இப்பொழுது அவள் வாரத்திற்கு 5 நாட்கள் கடுமையாக உழைப்பதினால், ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைத்து, மனமகிழ்ச்சியான வாழ்க்கைச் சூழலால் மனரம்மியமாக வாழ்கிறாள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு ஆவிகேற்ற வாழ்க்கையில் அவரைப் பின்பற்ற தகுதியில்லாதவர்களை அவரைப் பின்பற்றும்படி அழைக்க வந்தார். லேவி என்பவன் அப்படிப்பட்டவர்களில் ஒருவன். வரி வசூலிக்கும் ஆயத்துறையில் அவன் அமர்ந்திருந்த பொழுது இயேசு அவனைக் கண்டு “என்னைப் பின்பற்றிவா” என்றார் (மாற்கு 2:14). அவருடைய இந்த அழைப்பின் வார்த்தைகள் லேவியின் மனதைத் தொட்டது. ஆகவே உடனே அவன் இயேசுவைப் பின் பற்றினான். பொதுவாக ஆயக்காரர்கள் பண ஆசையுடையவர்களாகவும், செயல்களில் உண்மையற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆகவே அவர்கள் மதரீதியாக அசுத்தமானவர்கள் என்று கருதப்பட்டுவந்தார்கள். யூத மதத் தலைவர்கள் இயேசு லேவியின் வீட்டில் அவனோடும் மற்ற ஆயக்காரர்களோடும் அமர்ந்து போஜனம் பண்ணினதைப் பார்த்து “அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்” (மாற்கு 2:16). உடனே இயேசு “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புதற்கு அழைக்கவந்தேன்” (மாற்கு 2:17) என்று பதிலளித்தார்.

இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தார் அதில் நாம் அனைவரும் அடங்குவோம். அவர் நம்மை நேசிக்கிறார். அவருடைய பிரசன்னத்தில் வரும்படியும், அவரைப் பின்பற்றும்படியும் அவர் நம்மை அழைக்கிறார். அவரோடு கூட நாம் நடக்கும் பொழுது ஆவிக்கேற்ற வாழ்க்கையில் நாம் மேலும் மேலும் தகுதியுடையவர்களாக மாறுகிறோம்.